

பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (Stroke) என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படும் அவசர மருத்துவ நிலையாகும். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவதாலோ மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டு மூளையின் செயல்பாடுகள் மிக விரைவாக இழக்கப்படுவதை குறிக்கும். இது உலக அளவில் இறப்புக்கான நான்காவது முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதத்திற்கான சிகிச்சை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
அறிகுறிகள்:
1. சிரிக்க முயற்சிக்கும் பொழுது முகத்தின் ஒரு பக்கம் தொங்குதல், முகம் கோணல். அதாவது முகத்தின் திடீர் உணர்வின்மை அல்லது பலவீனம்.
2. இரு கைகளையும் உயர்த்தும் பொழுது ஒரு கை பலவீனமாகி கீழே விழுதல்.
3. பேசுவதில் தடுமாற்றம், குளறல் அல்லது புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவது.
4. வழக்கத்திற்கு மாறான மறதி, திடீர் குழப்பம், உடலின் ஒரு பக்கம் முழுவதும் மரத்துப் போதல்.
5. பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறியாக எந்த காரணமும் இன்றி கடுமையான தலைவலியை உணர்வது.
சிகிச்சையை விட தடுப்பு தான் எப்போதும் சிறந்தது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை பெறுவது முழுமையான குணமடைதலுக்கு உதவும்.
காரணங்கள்:
1. ரத்த உறைவு: கொழுப்புப் படிவுகள்(Plaque) இரத்தக் குழாய்களில் படிந்து, ரத்த ஓட்டத்தை தடுப்பதாலோ அல்லது ரத்தக்கட்டி உருவாவதாலோ ஏற்படுகிறது.
2. ரத்தக்கசிவு (Hemorrhagic Stroke): மூளையில் உள்ள ரத்தக்குழாய் வெடித்து மூளைக்குள் ரத்தம் கசிந்து அழுத்தம் கொடுப்பதால் ஏற்படுதல்.
3. அதிக ஆபத்து காரணிகளான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்.
4. உடல் செயலற்ற தன்மை மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல காரணிகள் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
தீர்வுகள்:
சிகிச்சையை விட தடுப்பு தான் எப்போதும் சிறந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை உட்கொள்வது, முக்கியமாக உடல் எடையை சீராக பராமரிப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
உடனடி சிகிச்சை அவசியம்:
பக்கவாதத்திற்கு ஆரம்ப கால சிகிச்சை மிகவும் முக்கியமானது. FAST (face, arms, speech, time) சோதனை மூலம் கண்டறிந்து, கோல்டன் ஹவர்(Golden Hour) எனப்படும் மூன்று - நான்கரை (3-4.5) மணி நேரத்திற்குள் மருத்துவமனை சென்றால், ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்:
காய்கறி, பழங்கள், கீரைகள் மற்றும் முழு தானியங்களை உணவில் எடுத்துக் கொள்வது, குறைந்த அளவில் உப்பு போன்றவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வதும், உடற்பயிற்சி மேற்கொள்வதும், உடல்எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
தடுப்பு நடவடிக்கைகள்:
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை முறையாக பரிசோதித்து கட்டுக்குள் வைத்துக் கொள்வதும், புகைப்பிடித்தல், மது பழக்கம் போன்றவற்றை கைவிடுவதும் அவசியம்.
மறுவாழ்வு சிகிச்சை(Rehabilitation):
1. தசைகளை வலுப்படுத்தவும், நடைப் பயிற்சியை மேம்படுத்தவும் பிசியோதெரபி (Physiotherapy) உதவுகிறது.
2. பேச்சுப் பயிற்சி (Speech Therapy) மூலம் பேசுவதில் மற்றும் விழுங்குவதில் உள்ள சிரமங்களை சரி செய்ய உதவுகிறது.
3. செயல்பாட்டு சிகிச்சை(Occupational Therapy) மூலம் அன்றாட வேலைகளை செய்வதற்கான திறனை மீட்டெடுக்க உதவுகிறது. இப்படி பக்கவாதத்திற்குப் பிறகு பேச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy) மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)