காசநோய்: எச்சரிக்கை அவசியம்… அறிகுறிகள், பாதிப்புகள், தடுக்கும் வழிகள்!

TB
TB
Published on

காசநோய் அல்லது TB என்பது நுரையீரலை முதன்மையாகத் தாக்கும் ஒரு தீவிரமான பாக்டீரியா தொற்று. 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ்' என்ற நுண்கிருமியால் ஏற்படும் இந்த நோய், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்புக்கு வழிவகுக்கும். இதன் தீவிரத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நோயை ஒழிக்கும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் காசநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது வருந்தத்தக்க உண்மை.

இந்தியாவில் காசநோயின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, நம் நாட்டில் சுமார் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் இரண்டு பேர் காசநோயால் உயிரிழப்பதாக அறியப்படுகிறது. இது ஆண்டுக்கு சுமார் 3.20 லட்சம் மரணங்களுக்குச் சமமாகும். 

இந்தச் சவாலை எதிர்கொள்ளும் விதமாக, 2025-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக அகற்றும் இலக்கை நோக்கி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது. இதன் நேர்மறையான விளைவாக, 2015 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் காசநோயாளிகளின் எண்ணிக்கை 17.7% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் 2024 அறிக்கை தெரிவிக்கிறது.  

காசநோயின் சில முக்கிய அறிகுறிகள்: 

மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், திட்டமிடாத உடல் எடை இழப்பு, இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல், மாலையில் அதிகரிக்கும் காய்ச்சல் அல்லது நீண்ட நாட்களாக இருக்கும் காய்ச்சல், மற்றும் எப்போதும் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்வது ஆகியவை காசநோயின் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

இதையும் படியுங்கள்:
பித்தப்பை கற்கள் உருவாவதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!
TB

இந்தத் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சில தடுப்பு முறைகளைப் பின்பற்றலாம். பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிசிஜி தடுப்பூசி காசநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நேரடித் தொடர்பைத் தவிர்ப்பது அல்லது மாஸ்க் அணிவது பரவலைக் குறைக்கும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வது அவசியம்.

இதற்காகப் பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் பணிபுரியும் இடங்களில் காற்றோட்டம் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதும் நல்லது. காசநோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்வதே பாதுகாப்பானது. அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் விழிப்புடன் செயல்படுவதே காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
அனைவர் மனதிலும் அவசியம் எரிய வேண்டிய பச்சை விளக்கு!
TB

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com