வால்மிளகு பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. என்றாலும் பெண்களின் வெள்ளைப்படுதலை போக்குவதில் அதிக பங்கு வகிக்கிறது. அது எவ்வாறு மற்ற பொருட்களுடன் சேர்ந்து பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்!
வால்மிளகு மரத்தில் படர்ந்து வளரும் கொடியினம். அதன் காய் காம்போடு சேர்ந்து வால்போல் காணப்படுவதால் இது வால்மிளகு எனப்படுகிறது. வால்மிளகு காரம், மணம், விறுவிறுப்பு உள்ள ஒரு கடை சரக்கு. நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும்.
பசி மிகுத்தல், உடல் வெப்பத்தையும், நாடி நடையையும் அதிகரித்தல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது வால்மிளகு. இதைப் பொடித்து கால் கிராம் தேனில் குழைத்துக் கொடுத்து வர சிறுநீர் பாதை அலர்ஜி, தந்தி மேகம், வெள்ளை, சளிக்கட்டு, பிரமேகம் ஆகியவை தீரும். வால்மிளகு பொடியுடன் பொரித்து பொடித்த படிகாரம் மிளகளவு கலந்து காலை, மதியம், மாலை கொடுத்து வர நாள்பட்ட வெள்ளை, வெட்டை ஆகியவை தீரும்.
வால்மிளகு பொடி, வெடியுப்பு வகைக்கு கால் கிராம் காலை, மாலை கொடுத்து வர வெள்ளை குணமாகும். ஒரு தேக்கரண்டி வால்மிளகு பொடியைத் தேனில் கலந்து நாளும் இருவேளை உண்டு வர சளி, வயிற்று வலி, தாகம், வெட்டை முதலியவை நீங்கி பசி மிகும்.
வால்மிளகு, அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை, கடுக்காய் ஆகியவற்றை ஒன்று இரண்டாய் இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லி நாளுக்கு நான்கு வேளை குடித்து வர இருமல் தணியும். வால்மிளகு பொடியை பாலில் காலை, மாலை கொடுத்து வர தொண்டை கம்மல் அகலும்.
வால்மிளகு பொடியை காலையில் இளநீரில் கலக்கி சாப்பிட்டு வர நீர்சுருக்கு, கல்லடைப்பு ஆகியவை நீங்கும். வாய்வு தொல்லை அகலும். ஒரு வால்மிளகை வெற்றிலை பாக்குடன் சுவைத்து விழுங்கி வர தலைவலி, வாய் நாற்றம், வாய்ப்புண், பல் ஈறு வலி, தொண்டைப் புண், குரல் கம்மல் ஆகியவை குணமாகும். திரிபலா சூரணத்துடன் வால்மிளகின் பொடியையும் சேர்த்து பல் துலக்கினால் பல்வேறு பல் பிரச்னைகள் தீரும். இம்மருத்துவத்தை தகுந்த ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மேற்கொள்வது நல்லது.