

வெளிச்சத்தில் அதுவும் காற்றில் ஏதோ புழுக்கள் மிதப்பதுப்போல் உங்கள் கண்களால் பார்க்க முடிகிறதா? இது சாதாரணமானவையா? அல்லது அசாதாரணமானவையா? தெரிந்து கொள்வோம்.
மக்கள் தங்கள் பார்வையில் குறிப்பாக வானம் அல்லது வெள்ளை சுவர் போன்ற பிரகாசமான விஷயங்களை பார்க்கும்போது, புழு அல்லது சிலந்தி வலை போன்ற அமைப்புகள் நகர்வதைக் கவனிப்பார்கள். பொதுவாக அதை 'கண் மிதவைகள்' (Eye Floaters) என்பார்கள். கண்ணுக்குள் இருக்கும் ஜெல்லி போன்ற பொருளான விட்ரியஸ் (vitreous), நமக்கு வயதாகும்போது படிப்படியாக மாறுவதால் இது ஏற்படுகிறது.
அவை திரவமாகி சுருங்கும்போது நுண்ணிய பகுதிகளாக ஒன்றாகக் கூடி, சிலருக்கு தங்களின் விழித்திரையில் ஒருவித லேசான மறைவை ஏற்படுத்துகின்றன. நம்முடைய மூளை இந்த விஷயங்களை மிதக்கும் புழுக்களாகவோ, நூல்கள், புள்ளிகளாகவோ புரிந்துகொள்கிறது. இந்த நிகழ்வு குறிப்பாக 50 வயதிற்குப்பிறகு மிகவும் பொதுவானது.
இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனித வாழ்வின் ஒரு தீங்கற்ற நிகழ்வாக பலராலும் கருதப்படுகிறது. காலப்போக்கில் நம் மூளையும் அதற்கேற்றவாறு அதை உன்னிப்பாக கவனிப்பதை நிறுத்தி விடுகிறது. இதனால் மக்களும் பெரும்பாலும் அவற்றை பலநேரங்களில் சாதாரண விஷயமாக கடந்து விடுகிறார்கள்.
எதற்கும் ஒரு அளவு உண்டு! இந்தக் கண் மிதவைகள் எப்போதும் சாதாரணமானவை அல்ல. திடீரென்று அதிக எண்ணிக்கையிலோ அல்லது புதிய மிதவைகள் தோன்றி அது உங்கள் பார்வையின் ஒரு பகுதியைத் தடுக்கும் திரை போன்ற நிழலை நீங்கள் கவனித்தாலோ, இது விழித்திரைக் கிழிவு (retinal tear) அல்லது விழித்திரை விலகலைக் (detachment) குறிக்கலாம். விழித்திரையானது பார்வைக்கு மிகவும் முக்கியம் என்பதால் இதுபோன்ற அசாதாரண நிலைகள் மருத்துவ அவசர நிலைகளாகும். விழித்திரை விலகலுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது நிரந்தரக் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
கண்ணின் உள்ளே ஏற்படும் அழற்சி, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் ரத்தப்போக்கு அல்லது கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கல்கள் ஆகியவை இந்தவகை ‘கண் மிதவைகளுக்கு’ பிற காரணங்களாகும். இந்நேரங்களில் ‘கண் மிதவைகள்’ வெறுமனே ஒரு சாதாரண விஷயம் மட்டுமல்ல; அவை ஒரு உள்ளார்ந்த பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கின்றன.
எப்போதாவது கண்களில் மிதக்கும் புள்ளிகளைக் காண்பது இயல்பானது; ஆனால், அவை திடீரெனத் தோன்றினாலோ, எண்ணிக்கையில் அதிகரித்தாலோ, அல்லது கண் சிமிட்டல்கள், பார்வை இழப்பு (vision loss) போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து வந்தாலோ நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். விழித்திரையில் பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த அந்தச் சூழ்நிலைகளில் மருத்துவமனைக்குச் செல்வது அவசியமாகும்.
இதோடு வழக்கமான கண் பரிசோதனைகளும் முக்கியமானது. குறிப்பாக நீங்கள் வயதானவராக, கிட்டப்பார்வை உடையவராக, அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் உள்ளவராக இருந்தால், வருடத்துக்கு ஒரு முறையேனும் கண் பரிசோதனை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)