நம் உடலின் தசைகள், எலும்புகள் மற்றும் சருமத்தின் கட்டமைப்பிற்கும் வளர்ச்சிக்கும் புரதச் சத்து (Protein) அவசியம் தேவை. திசுக்களை உருவாக்கவும், சீரமைக்கவும், உடல் முழுவதும் ஆக்சிஜனையும் ஊட்டச் சத்துக்களையும் எடுத்துச் செல்லவும் புரதம் பயன்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புரோட்டீன் அசைவ உணவுகளிலிருந்தும் தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்தும் பெறப்படுகிறது.
தாவர உணவுகளில் பருப்பு மற்றும் பயறு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகம். குறிப்பாக ராஜ்மா (Kidney beans) மற்றும் கொண்டைக் கடலையில் புரதம், இரும்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், எடைப் பராமரிப்பிற்கு உதவவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் செய்யும். பொதுவாக, இவ்விரண்டு உணவுகளும் ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் வாய்வு, வீக்கம் போன்ற கோளாறுகள் உண்டாகவும் வாய்ப்பாகும்.
ராஜ்மா மற்றும் கொண்டைக் கடலை இரண்டிலும் லெக்டின்ஸ் (Lectins) என்ற புரோட்டீன் உள்ளது. இது புரதத்தை கார்போஹைட்ரேட்களுடன் இணைக்கச் செய்யும். அதனால் ஜீரணம் கடினமாகி வயிற்றில் வாய்வு மற்றும் வீக்கம் உண்டாவதற்கு வாய்ப்பாகும்.
இவ்வாறான அசௌகரியங்களைக் குறைக்க இப்பயறு வகைகளை ஊற வைத்து அவற்றுடன் பெருங்காயம், இஞ்சி, பட்டை, கறிவேப்பிலை மற்றும் உப்பு போன்றவற்றை சேர்த்து சமைத்து உண்ணும்போது வீக்கம் மற்றும் வாய்வு போன்ற தொல்லைகள் உண்டாவது குறையும்.
பெருங்காயம் ஜீரணத்துக்கு உதவும் என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து வயிற்றில் வாய்வு மற்றும் வீக்கம் உண்டாவதை குறையச் செய்யும். இஞ்சி சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதுடன், குமட்டல் போன்ற அசௌகரியம் உண்டாவதையும் தடுக்கும். பட்டை, வயிற்றில் வாய்வு உண்டாகாமல் தடுக்கும். மேலும் இரைப்பை குடல் பகுதிகளில் வலி உண்டாவதைத் தடுக்கும் குணமும் இதற்கு உண்டு. இதனால் செரிமானம் எந்தவித தடையுமின்றி நல்ல முறையில் நடைபெறும். பயிறு வகைகளில் உள்ள அதிகளவு புரதத்தை நல்ல முறையில் ஜீரணிக்கச் செய்ய உதவக்கூடிய என்சைம்கள் கறிவேப்பிலையில் உள்ளன. உப்பு இப்பயிறு வகைகளில் உள்ள ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் ஜீரணிக்கப்பட்டு உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு சிறந்த முறையில் உதவி புரியும். குறிப்பாக பிளாக் சால்ட் உபயோகிப்பது அதிக நன்மை தரும்.
ராஜ்மா மற்றும் கொண்டைக் கடலையை சமைப்பதற்கு முன் 8 மணி நேரம் ஊற வைப்பதும் இரண்டு முறை நன்கு கழுவுவதும் அவசியம். இதனால் இதிலுள்ள ஒலிகோ சாக்கரைடுகளின் (Oligosaccharides) அளவு குறையும். இவற்றை நன்கு மிருதுவாகும் வரை சமைத்து உட்கொண்டால் ஜீரணமாவதில் சிரமம் ஏற்படாது.
அஜீரணம், வாய்வு, வீக்கம் போன்ற கோளாறுகள் உண்டாவதைத் தவிர்க்க லெக்யூம்ஸ்களை இரவு உணவுடன் சேர்த்து உண்பதைத் தவிர்ப்பது நலம்.
இந்த உணவுகளை உட்கொண்டபின் தொடர்ந்து பிரச்னைகள் இருக்குமாயின், மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நன்மை தரும்.