பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியனுக்கு பிறகு முதுகுத்தண்டில் வலி ஏற்படுவதற்கு காரணம் முதுகுத்தண்டில் போடப்படும் spinal anaesthesia என்னும் ஊசியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உண்டு. இதில் இருக்கும் உண்மை மற்றும் அதற்கான தீர்வைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக, பெண்கள் பிரசவத்தின்போது விரும்புவது சுகப்பிரசவம்தான். ஆனால், சமீப காலமாக பெண்களிடம் உடல் பருமன், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதாலும், குழுந்தையின் வளர்ச்சி பெரிதாக இருப்பதாலும் சுகப்பிரசவம் செய்ய முடியாமல், சிசேரியன் செய்கிறார்கள். இதனால், சிசேரியன் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
சிசேரியன் செய்வதற்கு முன்பு பெண்களுக்கு முதுகுத்தண்டில் ஊசிப்போடுவதால், முதுகுவலி வந்துவிடுவதாகப் பெண்கள் கருதுகிறார்கள். தைவானில் 2016ல் நடைபெற்ற ஆய்வில் சுகப்பிரசவம் நடந்த பெண்களுக்கு 31.5 சதவீதம் பேருக்கு முதுகுவலி வந்ததாகவும், சிசேரியன் செய்த பெண்களுக்கு 31.8 சதவீதம் முதுகுவலி வந்ததாகவும் 13 ஆண்டுகாலமாக நடந்த பிரசவங்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் பெரிதாக இல்லை.
பிறகு ஏன் பெண்களுக்கு முதுகுவலி வருகிறது? என்று ஆராய்ந்து பார்த்தால், பொதுவாகவே பிரசவத்திற்கு முன்பு பெண்களுக்கு Relaxin என்ற ஹார்மோன் சுரந்து இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் மற்றும் Ligamentsஐ ரிலாக்ஸ் செய்துவிடும். இது இயற்கையாகவே பிரசவ சமயங்களில் பெண்களுக்கு நடக்கும்.
இதுபோன்ற சமயங்களில் Ligaments மிகவும் லூசாக இருக்கும். அச்சமயம் Ligamentsஐ சரியாக கவனித்துக் கொள்ளாமல் எடைத்தூக்குதல், குழந்தையை தூக்குவது, சரியான பொசிஷனில் அமராதது, தாய்ப்பால் கொடுக்கும்போது சரியாக உட்காராமல் இருப்பது போன்ற காரணங்களால் முதுகுவலி ஏற்படலாம். இந்த வலி முதுகுத்தண்டில் ஏற்படுவதில்லை. அதைச் சுற்றியுள்ள தசைகளில்தான் வலி ஏற்படுகிறது. அதுவும் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் ஸ்ட்ரெயின் காரணமாகவேயாகும்.
தற்போது பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு Postpartum Weight gain என்று சொல்லப்படும் பிரசவத்திற்கு பின்பு உடல் எடை அதிகரித்து விடுகிறது. பிரசவத்தின் முன்பு 50 கிலோ இருந்த பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு 80 கிலோவிற்கு மேல் எடைப்போட்டு விடுகிறார்கள். இதனால் அவர்கள் முதுகிற்கு ஸ்ட்ரெயின் அதிகமாகி விடுகிறது. இதுபோன்ற பிரச்னைகள் சுகப்பிரசவத்திலும் நடக்கும், சிசேரியனிலும் நடக்கும். எனவே, இதுபோன்ற முதுகுவலி ஏற்படாமல் இருக்க உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும், சரியான பொசிஷனில் உட்காருவது, பால் கொடுப்பது போன்றவற்றை முறையாக செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் சரியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். முதுகுக்கு Stretching உடற்பயிற்சி மற்றும் முதுகுக்கு Muscle Strengthening உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். இதை செய்வதற்கு சரியான பிசியோதெரபிஸ்ட்டை அணுகி பயிற்சி மேற்கொள்வதால் முதுகுவலியை குறைக்கலாம்.
எனவே, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் முதுகுவலிக்குக் காரணம் முதுகில் போடப்படும் ஊசி இல்லை. சரியான Posture ல் அமராதது, உடல் எடை அதிகரிப்பது, முதுகெலும்பில் சரியான பலம் இல்லாததே காரணமாகும் என்பதைப் புரிந்துக்கொண்டு ஆரோக்கியமாக உடலை பேணிக்காக்க வேண்டியது அவசியமாகும்.