
கேன்சர் ட்ரீட்மென்ட், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ ரீதியான காரணங்களுக்காக பல தரப்பான வெளி நாட்டினர் இந்திய மருத்துவமனைகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை சற்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
2024ம் ஆண்டில் மட்டும், மருத்துவப் பயணத்திற்காக இந்தியா 4,63,725 விசாக்களை வழங்கியுள்ளதாக தகவல். மருத்துவப் பயணம் என்பது ஒரு நோயாளி சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. நோயாளியுடன் சேர்ந்து வரும் அவரது குடும்பத்தார் மூலம், தங்குமிடம், உணவகங்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பல வகையான வர்த்தகமும் செழிப்படைய வழியாகிறது. அதிக மக்கள் கூட்டம் நிறைந்த இந்திய நகரங்களில், வானிலை மாற்றங்கள், மொழி, உணவு என அனைத்து வகை அசௌகரியங்களையும் பொருட்படுத்தாமல், நோயாளிகள் தங்கள் நாட்டை விட்டு விட்டு இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருவதற்கான காரணத்தைக் கேட்ட போது நோயாளிகள், "இந்தியாவில் மட்டுமே சிகிச்சைக்கு ஆகும் செலவு எங்களால் சமாளிக்கும் அளவில் உள்ளது.
மேலும், எங்கள் நாட்டில் உள்ளதை விட இங்கு தரமான சிகிச்சை பெற முடிகிறது" என்று கூறியுள்ளனர்.
சிறந்த மருத்துவ சேவை தருவதாக 46 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் பத்தாவது இடத்தில் இந்தியாவும் இருபத்தி நாலாவது இடத்தில் பிலிப்பைன்ஸும் உள்ளன. பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு, ஒரு வயது குழந்தைக்கு பைலியரி அட்ரெசியா (Biliary Atresia) என்ற நோயின் காரணமாக ஈரல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது டாக்டர், "சிகிச்சையை பிலிப்பைன்ஸில் வைத்துக் கொள்ளலாம் அல்லது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார். அதற்கு குழந்தையின் தாய், "பிலிப்பைன்ஸில் என் மகன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் மருத்துவ செலவு மிக மிக அதிகம். நாங்கள் இந்தியா செல்கிறோம்" எனக் கூறி இந்தியா வந்துள்ளார். இங்கு அவருடைய கல்லீரலிலிருந்து ஒரு பகுதியை குழந்தைக்குக் கொடுத்து, மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 18378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
அவற்றுள் 1851 ஆபரேஷன்ஸ் வெளிநாட்டினருக்கு செய்யப்பட்டுள்ளதாக நேஷனல் ஆர்கன் மற்றும் திசுக்கள் மாற்று அமைப்பின் ரிப்போர்ட் கூறுகிறது. இதில் 1445 ஆபரேஷன்ஸ் டெல்லியில் NCR மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
அரசின் Transplantation of Human Organs and Tissues Act 1994 ன் விதிகளைப் பின்பற்றி, இறந்தவர்களின் உடலிலிருந்து பெறப்படும் உறுப்புகள் மற்றும் உயிருள்ளவர்கள் தானமாகத் தரும் கிட்னி, கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவைகளை பயன்படுத்தி இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகள் தங்களுடன் அழைத்து வரும் இரத்த சம்பந்தமுள்ள டோனர் (donor)களை DNA டெஸ்ட் செய்தும், பேஷண்ட் - டோனர் இருவருக்குள்ளும் உள்ள உறவை புரூஃப் மூலம் உறுதி செய்த பின்பே மருத்துவமனை அதிகாரிகள் நோயாளியை சிகிச்சைக்கு ஏற்றுக் கொள்கின்றனர்.
புது டெல்லியில் உள்ள Max Super Speciality Hospital-லை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ட்டாரன்ட்கள் வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு உணவு, லான்ட்ரி, ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் குறைவின்றி செய்து வருகின்றன. மருத்துவமனைகளின் வெளியே அரபிக் மற்றும் ரஷ்யன் மொழிகளிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது போன்ற வசதிகளுக்காகவே இந்தியாவை தேடிவரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்று கூறலாம்.