

சுற்றுச்சூழல் வெப்பம் அதிகரிப்பதால் கர்ப்பம் தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறதா? கர்ப்பிணியின் உடல் வெப்பம் கருவுக்கு எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறது? என்பது குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நம் நாட்டில் 800 கர்ப்பிணிகளிடம் இத்தகைய ஆய்வு நடத்தப்படுவது (pregnant woman healthcare) இதுவே முதல்முறை.
அதிக வெப்பம் உள்ள இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு, எதிர்பாராத விதமாகக் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரே மாதிரியான உடல் உழைப்பைச் செய்தாலும், வெப்பம் மிகுந்த சூழலில் வேலை செய்யும் பெண்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமத்து வயல்வெளிகளில் வேலை செய்யும் பெண்களும், நகரங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுமே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கோடைக்காலம் தொடங்கும்போதே அரசு மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் 'வாட்ஸ்அப்' (WhatsApp) மற்றும் ஐ.வி.ஆர் (IVR) எனப்படும் தானியங்கி குரல்வழித் தகவல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கம்மங்கூழ், மோர் போன்ற குறைந்த செலவிலான உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பப்பாளி, வெள்ளை பூசணி போன்ற உணவுகள் குறித்த பாரம்பரிய நம்பிக்கைகளை மாற்ற முற்படாமல், உடல் குளிர்ச்சி தரும் உணவுகளையே பரிந்துரைக்கின்றனர். (உப்பு சேர்ப்பது குறித்துத் தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்).
உடல் சூட்டைக் குறைக்க ஈரத்துணியால் அவ்வப்போது கழுத்தின் பின்பகுதியைத் துடைக்க வேண்டும்.
கிராமத்துப் பெண்கள் வேலைக்கு இடையே வாய்க்கால் நீரில் முகம், கை, கால்களைக் கழுவி உடல் சூட்டைக் குறைத்துக் கொள்கின்றனர். ஆனால், அலுவலகம் செல்லும் பெண்கள் 'மேக்கப்' கலைந்துவிடும் என்று முகம் கழுவாமல் இருக்கக் கூடாது; உடல் சூட்டைக் குறைப்பதே முக்கியம்.
பாக்கெட்டுகளில் விற்கும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் உள்ள 'பிரக்டோஸ்' சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். அதற்குப் பதிலாக இளநீர் பருகலாம்.
வெயில் நேரங்களில் கர்ப்பிணிகள் கண்டிப்பாகப் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
காலை அல்லது மாலை என வெப்பம் குறைந்த நேரங்களில் சமைத்து வைத்துக்கொள்வது போன்ற சிறிய மாற்றங்கள் வெப்பத் தாக்கத்திலிருந்து காக்கும்.
ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே முதியவர்களுக்கும் விழிப்புணர்வுச் செய்திகள் அனுப்பப்பட வேண்டும். முதியவர்களுக்குத் தாக உணர்வு குறைவாக இருக்கும்; உடலில் கொழுப்பு அதிகம் இருந்தாலும் அவர்களால் வெப்பத்தை உணர முடியாது. குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.
அக்காலத்தில் கம்பங்கூழ், பழைய சோறு சாப்பிட்டனர். இன்று இட்லி, இடியாப்பம், மதியம் குஸ்கா, இரவு புரோட்டா எனச் சாப்பிடுகின்றனர். புரோட்டா போன்ற உணவுகளைச் செரிமானம் செய்ய உடல் வெப்பம் அதிகரிக்கும். ஆனால், கம்பங்கூழில் 'கிளைசிமிக் இன்டெக்ஸ்' குறைவாக இருப்பதால், செரிமானம் மெதுவாக நடக்கும்; இதனால் ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கும், உடல் சூடும் அதிகரிக்காது.
உடல் வெப்பம் அதிகரிப்பதற்கும், தொற்று நோயால் வரும் காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாட்டை மருத்துவர்கள் உணர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும். இதற்கு யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு தூக்கத்தை மேம்படுத்தலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)