
நம் உடலுக்கு ஸ்டீராய்டு போன்று அதிக அளவு சக்தியை, இயற்கையாக வழங்கக் கூடிய ஓர் அபூர்வ மூலிகைதான் யர்சகும்பா (Yarsagumba). இதை, ‘இமயமலை வயாக்ரா' என்றும் அழைப்பர். இது இமயமலைப் பகுதிகளில் 4000 - 5000 மீட்டர் உயரத்தில், இறந்த கம்பளிப் பூச்சிகளின் தலை மீது ஓட்டுண்ணிப் பூஞ்சையாய் (Parasitic fungus) வளர்வது. அதிகளவு சக்தி தரக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது. உத்தர்காண்ட், நேபாள், திபெத், பூட்டான் ஆகிய பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுபவை.
பழங்காலத்திற்கு முன்பிருந்தே இவற்றின் சாறு சைனீஸ் மற்றும் திபெத்தியன் மருத்துவத்தில், நோயை குணமாக்க, சக்தி மற்றும் சகிப்புத்தன்மை கொடுக்கவென பல காரணங்களுக்காக முதன்மைப் பொருளாக இருந்துள்ளது. இதில் உள்ள அதிகளவு நோயெதிர்ப்புச் சத்தானது, நம் உடலை வலுவிழக்கச் செய்யும் தொற்றுகளிலிருந்து காப்பாற்றி, சோர்வு நீக்கி நலமடையச் செய்கிறது.
இதன் அடாப்டோஜென் (Adaptogen) என்ற குணத்தினால், நம் உடலில் தேவையற்ற வேதிப்பொருட்களின் சேர்க்கையால் ஏற்படும் அழுத்தம் நீங்குகிறது. அதாவது, உடம்பை இலகுவாக்கி ஸ்ட்ரெஸ்ஸை நீக்கும் தன்மையுடையது. இதன் தனித்துவமான குணங்கள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான சக்தியால் நம் உடல் மற்றும் மனச்சோர்வு நீங்குகிறது.
யர்சகும்பாவின் உள்ளிருக்கும் கார்டிசெப்ஸ் (Cordyceps) என்ற பூஞ்சை, நுரையீரலின் செயல்பாட்டை சீராக்கி அதிகளவு ஆக்சிஜனை உடம்பு உள்ளிழுக்க உதவுகிறது. இதன் மூலம் அதிகப்படியான ஆக்சிஜன் உடம்புக்குக் கிடைக்கிறது. தாங்கு சக்தி அதிகரித்து சோர்வு குறைகிறது. விளையாட்டு வீரர்களுக்கும் உடலுழைப்பு செய்பவர்களுக்கும் பயனளிக்கக் கூடியது இது. ஆஸ்துமாவை குணமாக்குகிறது. இரத்த அழுத்தத்தையும் சீராக்குவதால் இதயம் பாதுகாப்பாக இயங்கும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களும் இதனால் குணமாகின்றன. இரத்தம் மற்றும் விந்துக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
இமயமலை சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல சிரமங்களுக்கு இடையே மலையின் உச்சிப் பகுதிகளுக்குச் சென்று இதைத் தங்கள் கைகளால் சேகரிக்கின்றனர். இதுபோன்ற காரணத்தினால் இதன் பற்பல பயன்களைக் கருத்தில் கொண்டு இதன் விலை தங்கத்திற்கு இணையாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இவ்விதமாக பலவித நன்மைகளை உள்ளடக்கி, கிடைத்தற்கரிய பொருளாகவும் கருதப்படும் யர்சகும்பாவை மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உபயோகிப்பது நலம்.