– சாந்தி கார்த்திகேயன்.
தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பில் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இதன் நான்காவது நாள் நிகழ்ச்சி, சென்னை ஐஐடியில் பறையிசை மற்றும் ஒப்பாரி பாடலுடன் தொடங்கியது. மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் , இயக்குனர் அதியன் ஆதிரை, இசையமைப்பாளர் சாம் ரோல்டன் ஆகியோர் கலந்துக் கொண்டு மக்களோடு மக்களிசையை கொண்டாடினர்.
இசையமைப்பாளர் சாம் ரோல்டன் பேசும்போது, "உலக இசையில் பறையிசை மிக முக்கியமானது மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் எழுச்சிக்கான ஒரு மாபெரும் முயற்சியை எடுத்துள்ளார்" என்று கூறினார். பின்பு பேசிய இயக்குனர் அதியன் ஆதிரை "கிராமப்புற வாழ்வியலை மக்களிசையோடு தொடர்ப்பு படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது" என்று வாழ்த்து கூறினார்.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் விருது கொடுத்து கௌரவித்தனர். இதனை தொடர்ந்து மார்கழியில் மக்களிசையின் ஐந்தாவது நாளாக மீண்டும் சென்னை ஐஐடி–யில் இன்று நடைப்பெற உள்ளது.