Raghu Thatha movie review 
வெள்ளித்திரை

விமர்சனம்: ரகு தாத்தா - எதிர்ப்பா? திணிப்பா? குழப்பும் திரைக்கதை!

ராகவ்குமார்

அது 1960 களின் காலகட்டம். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருக்கிறது. வள்ளுவன் பேட்டை என்ற கிராமத்தில் கயல்விழி பாண்டியனும் (கீர்த்தி சுரேஷ்) தாத்தா ரகோத்தமனும் (எம் எஸ். பாஸ்கர்) தீவிரமாக ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுகிறார்கள். ஊரில் உள்ள ஹிந்தி பிரசார சபாவை நடத்த விடாமல் செய்து, ஹிந்தி ஆசிரியரை ஊரை விட்டு விரட்டி விடுகிறார்கள்.

க. பா. என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் பெண்ணியம் சார்ந்த கதைகள் எழுதுகிறார் கயல்விழி. ஊரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறார். ஹிந்தி கற்று கொண்டால்தான் ப்ரோமோஷன் கிடைக்கும் நிலை வந்த போதும் ஹிந்தி கற்று கொள்ள மறுக்கிறார். தன்னை போலவே முற்போக்கு சிந்தனை கொண்ட செல்வன் (ரவீந்திர விஜய் ) என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

ஒரு கட்டத்தில் செல்வன் முற்போக்குவாதி அல்ல, ஆணாதிக்க சிந்தனை கொண்டவர் என கயல் விழிக்கு தெரிய வருகிறது. ஹிந்தி கற்று கல்கத்தா வங்கி கிளைக்கு சென்று விட்டால் திருமணம் நின்று போகும் என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்று கொள்கிறார். தீவிர ஹிந்தி எதிர்ப்பாளர் ஹிந்தி கற்று கொண்டால் ஏற்படும் குழப்பமே இந்த ' ரகு தாத்தா'.

ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்தி திணிப்பு என்ற விஷயத்தை வைத்து இன்று வரை குழப்புகிறார்கள் அரசியல்வாதிகள். இந்த குழப்பம் டைரக்டர் சுமனுக்கும் இருக்கிறது போல. எதிர்பையும், திணிப்பையும் வைத்து குழப்பி உள்ளார். படம் தொடங்கியது முதல் இறுதி வரையிலான காட்சிகள் அனைத்தும் வசனங்களினால் நிரம்பி உள்ளன. இது சல்லிப்படைய செய்கிறது.

சிறந்த political satire (அரசியல் நகைச்சுவை ) படத்திற்கான வாய்ப்பு இருந்தும் டைரக்டர் தவற விட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜான் ரோடன் இசையில் பாடல்கள் வரும் போதெல்லாம் ரசிகர்கள் வெளியில் சென்று விட்டு பாடல் முடிந்த பின்பு வந்ததை பார்க்க முடிந்தது. படத்தில் சில பாசிட்டிவான விஷயங்களும் உள்ளன. ரவீந்திர விஜய், கீர்த்தி சுரேஷின் நடிப்பு உண்மையான காதலர்களை கண் முன் கொண்டு வந்துவிடுகிறது. வெளியே பகுத்தறிவுவாதியாகவும், உள்ளே பிற்போக்குவாதியாகவும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார் ரவீந்தர். பேருந்தில் பயணம் செய்து கொண்டே காதலை ரவீந்தர் கீர்த்தியிடம் சொல்ல முயற்சிக்கும் காட்சி சிறப்பாக உள்ளது. பழைய ரேடியோ பெட்டி, 1960 களின் வீடுகள் போன்றவை நேர்த்தியாக ஆர்ட் டைரக்டர் உருவாக்கியுள்ளார். தேவதர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர், கூத்து பட்டறை ஜெயக்குமார் இவர்கள் யாரையுமே டைரக்டர் சரியாக பயன்படுத்தவில்லை.

சரியான திரைக்கதை இல்லாதது, காதபாத்திர உருவாக்கத்தில் நேர்த்தியின்மை போன்ற காரணங்களால் இந்த தாத்தாவை முழுமையாக ரசிக்க முடியவில்லை.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT