How Rajendra chola conquered Indian ocean?
How Rajendra chola conquered Indian ocean? Image Credits: LinkedIn
கலை / கலாச்சாரம்

இந்தியப் பெருங்கடலும், ராஜேந்திர சோழனின் கடற்படையும்: ஒரு அலசல்!

நான்சி மலர்

லெக்சாண்டர், நெப்போலியன், பாபர், அக்பர் போன்ற மன்னர்களைக் கொண்டாடிய நம் நாடு, ராஜராஜனையும், ராஜேந்திரனையும் சரியாக கவனிக்கவில்லை என்றே தோன்றுவதுண்டு. அவர்களின் வரலாறு போதிய அளவில் பேசப்படவில்லை. ஆசிய நிலப்பரப்பில் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆண்ட ராஜேந்திர சோழனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

உலகமே வியந்து ஒரு அரசனை இன்றளவும் ஒரு செயலுக்காக பாராட்டுகிறார்கள் என்றால் அதுதான், ராஜேந்திர சோழனின் கடற்போர். சாதாரணமாக நிலத்தில் போர் புரியவே பல தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படியிருக்க, கடலில் சென்று போர் புரிந்து நாடுகளை கைப்பற்றுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

ராஜேந்திர சோழனின் கடற்பயணத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் நாம் ஆமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். கடல் ஆமைகளிடம் ஒரு அபூர்வமான குணம் இருக்கிறது. அதாவது, ஆமைகள் பிறந்த பிறகு உணவு போன்ற பல பிரச்னைகளுக்காக தங்கள் இடத்தை விட்டுச் சென்றாலும் அதனுடைய இனப்பெருக்க காலத்தில் தாங்கள் பிறந்த அதே கடற்கடரைக்கு வந்து முட்டைகளை இடுமாம். இது எப்படி சாத்தியமெனில் கடலின் நீரோட்டத்தையும், தாங்கள் பிறந்த இடத்தின் காந்த அலைகளையும் ஆமைகள் நினைவில் வைத்துக்கொண்டு இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு சராசரியாக 85 கிலோ மீட்டர் தொலைவே கடக்க முடியும். ஆனால், இந்த ஆமைகள் பல்லாயிரக்கணக்கான தொலைவைக் கடக்கின்றன. அது எப்படி சாத்தியம் என்றால், கடல் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நீந்தாமலே மிதந்தே கடக்கிறது.

ஆமைகளின் நீரோட்டப் பாதையை அறிந்தவன்தான் ராஜேந்திர சோழன். இந்த ரகசியத்தை வைத்துத்தான் அவர்கள் ஆமைகளை வழிகாட்டியாகக் கொண்டு அந்த பெருங்கடலில் எளிதாக படகுகளில் பயணித்தார்கள். கீழே காற்றுகள் எந்த திசையில் வீசுகிறது, ஆமைகள் செல்லும் கடல் நீரோட்டம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் மிகச் சரியாகக் கணக்கிட்டு அதன் திசையில் படகை செலுத்தும்போது படகு எளிதாகவே அதன் இலக்கை அடைந்துவிடுகிறது. வங்கக்கடலில் வடகிழக்கு காற்று ஓயும்போது கடல் படையெடுப்பை மேற்கொள்ளலாம். இதுவே படையெடுப்புக்கு ஏற்ற காலமாகும். இந்த காலநிலை மார்கழி மாதத்தின் இறுதியில் ஆரம்பமாகும். அப்போது வங்கக்கடலில் புயல்கள் ஓய்ந்து கடல் அமைதி நிலையை அடைந்திருக்கும். அப்போதுதான் போருக்குத் தயாராகும் கப்பற்படைகள்.

‘அலைக்கடல் மீது பலக்கலம் செலுத்தி’ என்று தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருக்கும் கல்வெட்டே ராஜேந்திர சோழனின் சரித்திரத்திற்கு இன்றுவரை சான்றாக உள்ளது. இன்றைக்கு ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. திசைக்காட்டும் கருவி, எதிரிகளின் தொலைதூர செயல்களை கண்காணிக்கும் கருவிகள் வந்துவிட்டன. ஆனால், அப்போதெல்லாம் இயற்கையின் திசையில்தான் பயணம் செய்ய வேண்டும். கடலின் தன்மையறிந்து, காற்றின் வாசனை உணர்ந்து, ஆமைகளின் நீரோட்டத்தை புரிந்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான வீரர்கள், யானைகள், குதிரைகள், பல்லாயிரக்கணக்கான ஆயுதங்களை சுமந்து செல்லுமளவிற்கு அவர்களின் கப்பல்கள் இருக்க வேண்டும். இப்படித்தான் பல ஆயிரக்கணக்கான மைல் தொலைவை கடந்தும் பல நாடுகளையும், தீவுகளையும், கடல் பரப்புகளையும் வென்று திரும்பியது ராஜேந்திர சோழனின் கடற்படை.

அக்காலத்தில் நேர்த்தியான கலங்களை கட்டுவதில் மாலத்தீவு மக்கள் பெயர் போனவர்கள். அவர்களின் கப்பல்களையே அடித்து உடைத்து அந்த நாட்டையே கைப்பற்றும் அளவிற்கு தொழில்நுட்பத்தில் நேர்த்தியான, உறுதியான கலங்களை சோழர்கள் உருவாக்கினார்கள் என்று அக்காலத்து வெளிநாட்டு வணிகர்களும், பயணிகளும் தங்கள் குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்றொரு பெயரும் உண்டு. 'கடாரம்' என்றால் இன்றைய மலேசியா, பர்மாவிலிருந்து, இந்தோனேசியா வரை ராஜேந்திர சோழன் வென்ற நிலப்பரப்பு 36 லட்ச சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். ராஜேந்திர சோழன் தன்னுடைய கப்பற்படையின் செயல்பாட்டை அதிகரிக்க தன்னுடைய தலைநகரை கொள்ளிடக்கரைக்கு மாற்றினான். ராஜேந்திர சோழனின் கப்பற்படை கடற்படை ராணுவமாக செயல்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழர்களின் அடையாளமாக விளங்கிய மரம் எது தெரியுமா?

ஆன்மீகக் கவிதை - தமிழ் வளர்த்த சமயக் குரவர்!

அதிக மனக்கவலையின் பரிசு உடல் பருமன்; எப்படித் தெரியுமா?

The Color Code: A Child’s Perspective on Pink and Blue!

குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!

SCROLL FOR NEXT