Who owns the Kohinoor diamond? 
கலை / கலாச்சாரம்

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி நீண்ட காலமாகவே நீடிக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரமானது மீண்டும் திரும்பித் தரப்படவில்லை. இந்த நிலையில், கோஹினூர் வைரத்தை பிரிட்டிஷாரிடம் இருந்து மீட்டு வர வேண்டும் என்ற வாதங்கள் எழுந்து வருகின்றன. அவ்வப்போது கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தமானது என்ற குழப்பம் அடிக்கடி எழுகிறது.

கோஹினூர் வைரம் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது. 105.6 கேரட் எடை கொண்ட கண்கவர் கோஹினூர் வைரம், காலம் காலமாக வீரம், வெற்றி, மதிப்பு, அதிகாரம் ஆகியவற்றின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. யாரிடம் இந்த வைரம் இருக்கிறதோ அந்த ஆட்சியாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்துள்ளனர். எனவே, இந்த வைரத்தைக் கைப்பற்ற அரசர்கள் இடையே போட்டி நிலவி வந்திருக்கிறது.

தற்போது கோஹினூர் வைரமானது பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கிறது. உண்மையில் இந்த கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தமானது? முகலாயர்களுக்கா? பிரிட்டிஷ்காரர்களுக்கா? இருவருமே இல்லை உண்மையில் கோஹினூர் வைரம் காக்கட்டியா சமூகத்தினருக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது. தற்போதைய ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளை 12ம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர்கள்தான் காக்கட்டியா வம்சத்தினர். அந்த காலகட்டத்தில் சக்தி வாய்ந்த அரச வம்சமாக காக்கட்டியா வம்சம் திகழ்ந்தது. கோஹினூர் வைரத்தின் உரிமையாளர்கள் இவர்களே என நம்பப்படுகிறது. காக்கட்டியா அரச வம்சத்தினர், கோஹினூர் வைரத்தை தங்கள் சக்தி மற்றும் கௌரவத்தின் அடையாளமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கோஹினூர் வைரத்தின் சரியான தோற்றம் என்பது இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முந்தைய பண்டைய சமஸ்கிருத நூல்களில் கோஹினூர் வைரம் குறித்த குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபற்றிய முதல் பதிவு முகலாயப் பேரரசை நிறுவிய பாபரிடமிருந்து வருகிறது. அதாவது, பாபர் 1526ல் டெல்லி சுல்தானிடம் இருந்து கோஹினூர் வைரத்தை வாங்கியதாக குறிப்புகள் கூறுகின்றன.

காக்கட்டியா வம்சத்தில் 1199 முதல் 1262 வரை ஆட்சி செய்த கணபதி தேவா மற்றும் அவரது மகள் ருத்ரமாதேவி ஆகியோர் கோஹினூர் வைரத்தை வைத்திருப்பதை பெருமையாகக் கருதியுள்ளனர். இவர்களது ஆட்சியின் கீழ்தான் கோஹினூர் இருந்துள்ளதாகத் தெரிய வருகிறது. பின்னாளில் அதாவது, 1849ம் ஆண்டில் பஞ்சாப் பகுதி இணைக்கப்பட்டது தொடர்ந்து கோஹினூர் வைரமானது பிரிட்டிஷார் வசம் சென்றது.

இந்தியாவில் கிடைத்த மதிப்புமிக்க கோஹினூர் வைரம் கடைசியாக இருந்தது ‘துலிப் சிங்’ எனும் 10 வயது சிறுவனிடம். 1849ம் ஆண்டு நடந்த இரண்டாம் ஆங்கிலோ - சீக்கிய போரில் சீக்கிய அரசு கைமாறி டல்ஹெளசி கவர்னர் ஜெனரலிடம் சென்றது. அவர்கள் கைப்பற்றிய அரசப் பொருட்களில் ஒன்றுதான் கோஹினூர் வைரம். அதை இங்கிலாந்து மகாராணிக்கு பரிசாக வழங்கினார் டல்ஹெளசி.

கோஹினூர் வைரம் இந்திய சிறுவனின் உடைமை. அதை பிரிட்டிஷ் மகாராணிக்கு வழங்கக் கூடாது என எதிர்த்த ஒரே பிரிட்டிஷ்காரர் ‘ஊட்டியின் தந்தை’ என புகழப்படும் ஜான் சல்லிவன். அப்போதைய நீலகிரி டாக்குமெண்ட் சென்டரில் டைரக்டர் தர்மலிங்கம் வேணுகோபால் என்பவர் இந்திய சொத்து ஒன்று இங்கிலாந்து செல்லக்கூடாது என்று 70 பக்க கடிதம் ஒன்றை எழுதி சல்லிவனுக்கு அனுப்பினார். அதை ஆமோதித்த சல்லிவனும் தனது எதிர்ப்பு குரலை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுப்பினார். கோஹினூர் வைரம் இப்போது இந்தியாவில் இருந்தால் அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 174 லட்சம் கோடிகள். (21 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). என்ன, மூச்சு முட்டுகிறதா?

கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயற்சித்த தந்தை… கிரிக்கெட் வீராங்கனைக்கு வந்த சிக்கல்!

இதோ ஈஸியான தீபாவளி பட்சண டிப்ஸ் உங்களுக்காக..!

ஓ! இதனால தான் கிரிக்கெட் வீரர்கள் சுவிங்கம் மெல்கிறார்களா? 

குறையில்லாத குழந்தைப் பேறு - தாயாகப் போகும் இளம் பெண்களே, கொஞ்சம் கேளுங்க!

செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப்போடாதீர்கள்!

SCROLL FOR NEXT