Depression 
வீடு / குடும்பம்

வாழ்க்கையை சிதைக்கும் மனச்சோர்வு!

பொ.பாலாஜிகணேஷ்

றுதல் - இந்த நான்கு எழுத்துக்குத்தான் எத்தனை சக்தி தெரியுமா? நாம் பிறருக்கு ஆறுதலாக இருந்தால் நம் மனம் மட்டுமல்ல, எதிரில் இருப்பவரின் மனமும் புன்னகைப் பூக்கள் பூக்கும், உற்சாகம் அடையும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும்போது அவர்களை ஆறுதல்படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்துகொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்லவிதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?

"அட, என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம்தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது.

காய்ச்சல், தலைவலி போன்ற ஓர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் ‘என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே, எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு’ என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோஷமாக ஆகிவிட முடியாது. காலம்தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.

மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத் தோன்றும். அதைக் கேட்க காதுகள்தான் தேவை. எனவே, கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சில வேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம். அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.

பொதுவாக மனம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல்படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள். வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும்போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.

சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டிக் கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஆனால், எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.

கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும். மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள். எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச் செய்யும்.

உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும். மனசோர்வு மட்டும் ஒரு மனிதனுக்கு இருந்தால் அது மெல்ல மெல்ல அவரது வாழ்க்கையை சிதைத்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT