குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது எதுவென்றால், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்புதான். இந்த பிணைப்பு வலுவாக இருக்க, பெற்றோர்கள் குழந்தைகளுக்கானதை அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வகையில் செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளிடம் அதிக உரையாடல்களை நிகழ்த்துவது நல்லது. எனவே இந்த பதிவில் தூங்கச் செல்வதற்கு முன் உங்கள் குழந்தைகளிடம் எதுபோன்ற விஷயங்களை சொல்ல வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
1. அன்பாக பேசுங்கள்: குழந்தைகளிடம் பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தை என்பது மிக மிக முக்கியமானவை. நீங்கள் அவர்களிடம் எப்படி பேசுகிறீர்களோ, அந்த தன்மையிலேயே அவர்கள் வளர்கிறார்கள். பொதுவாக உங்கள் குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன்பு வெறும் குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ் என சொல்வதுடன் சேர்த்து அன்பான வார்த்தைகளையும் பகிருங்கள். இப்படி நீங்கள் பேசும் அன்பான வார்த்தைகள் உங்கள் குழந்தைகளை அதிகம் ஊக்கப்படுத்தும்.
2. உங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்: உங்களுக்கு குழந்தைகளிடம் அவர்கள் உங்களுக்கு பிள்ளைகளாக இருப்பதால் நீங்கள் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். அவர்கள் செய்த ஏதேனும் சிறப்பான விஷயங்களை சுட்டிக்காட்டி பாராட்டுவது உங்களுக்குள் பிணைப்பையும் பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கும். இது உங்கள் குழந்தைகள் நன்றாக உறங்குவதற்கு ஏதுவாக அமையும்.
3. அவர்களின் அன்றைய நாள் எப்படி சென்றது எனக் கேளுங்கள்: ஒவ்வொரு நாளும் இரவு தூங்குவதற்கு முன்பு உங்கள் குழந்தைகளிடம் அவர்களின் அன்றைய நாள் எப்படி சென்றது போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. இப்படி சேகரிக்கும் விவரங்கள் உங்கள் குழந்தைகளை பற்றி நீங்கள் அதிகம் புரிந்துகொள்ள உதவும். அவர்களின் அனுபவங்களை நீங்கள் தெரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுங்கள். இது அவர்களின் செயல்களைப் பற்றி அறிந்து கொண்டு குழந்தைகளின் நலனைக் காக்க உதவும்.
4. எது நடந்தாலும் உன்னுடன் நான் இருக்கிறேன் எனச் சொல்லுங்கள்: பெற்றோராகிய நீங்கள் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உணர்வை கட்டமைப்பது முக்கியம். நீங்கள் அவர்களுக்கு எந்த அளவுக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்பதை குழந்தைகளுக்கு நினைவுபடுத்துங்கள். இத்தகைய வார்த்தைகள் உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கையை ஊட்டும். சவால்களை நேரடியாக எதிர்கொள்ளும் தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்கும்.
5. அவர்களின் புதுமையான யோசனைகள் பற்றி கேளுங்கள்: பிள்ளைகளை எப்போதும் ஒரே மாதிரியாக வளர்க்க நினைக்காமல், அவர்களின் கற்பனைத்திறன் மற்றும் கிரியேட்டிவிட்டியை தூண்டிவிடும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் புதுமையான விஷயங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து, நேர்மறையான மனநிலையை உருவாக்க முயலுங்கள்.
6. தைரியமூட்டும் வார்த்தைகளை பேசுங்கள்: உங்கள் குழந்தைகளை எப்போதும் பயமுறுத்தியே வளர்க்காமல், தைரியமானவர்களாகவும், பலம் நிறைந்தவர்களாகவும் வளர்ப்பது அவசியம். இது இந்த உலகத்தை அவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும். மோசமான சூழ்நிலைகளைக் கண்டு பயப்படாமல், அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் இதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு வளரும்.
இப்படி உங்கள் குழந்தை உறங்கச் செல்வதற்கு முன்பு ஊக்கமூட்டும் வகையில் பல விஷயங்களை பேசும்போது, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நிம்மதியான உறக்கம் கிடைக்க வழிவகுக்கும்.