Three Meals a Day: What Hinduism Says https://www.tamilxp.com
வீடு / குடும்பம்

தினமும் மூன்று வேளை உணவு: இந்து மதம் சொல்வதென்ன?

பொ.பாலாஜிகணேஷ்

ணவே உடலை வளர்க்கிறது, உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ எனக் கூறினார். உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உண்கிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும். நாம் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த ஆற்றலைத் தருவது உணவு. இந்த ஆற்றல், உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் மூலமே நமக்குக் கிடைக்கிறது. இந்த ஆற்றலினால்தான் உடல் இயங்குகிறது. மனம் சிந்திக்கிறது, செயல்படுகிறது. எனவே, நமது வாழ்வையே தீர்மானிக்கும் உணவைப் பற்றி நமது முன்னோர்கள் கூறும் நம்பிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

காலை, இரவு என்று இரண்டு வேளைகள் உண்பதை மட்டுமே இல்லறத்தாருக்கான நியதியாக இந்து மதம் கூறுகிறது. ஒருவேளை உண்பவர் 'யோகி' என்றும், இருவேளை உண்பவர் 'போகி' (உல்லாசி) என்றும், மூன்று வேளை உண்பவர் 'ரோகி' (வியாதியாளர்) என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம்தான்.

ஒவ்வொரு வேளை உணவைச் சாப்பிடும் முன்பும் ஆண்டவனை வணங்கிய பிறகே உண்ண வேண்டும். அந்த உணவை தந்ததற்கு நன்றியும், தான் உண்ணும் உணவு செரித்து நல்ல உணர்வைத் தர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ள வேண்டும். 'இந்த உணவை பெறும் வேளையில் ஏதேனும் உயிர் துன்பப்பட்டு இருந்தால், அதற்கு மன்னிப்பைக் கோரிக்கொள்வதும்' ஆன்றோர் வழக்கம். அதன் பிறகு சுத்தமான எளிய உணவை ஒருவர் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் அவரது கல்வி, திறமை, கலைகள் யாவும் வளரும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும். பீடை ஒழியும். தெற்கு நோக்கி அமர்ந்து உண்பதால் அழியாத புகழ் உண்டாகும், சொல்வன்மை பெருகும்.

ஆனால், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அந்த உணவே நோயை உருவாக்கும். எனவே, வடக்கு நோக்கி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏன் என்றால், கிழக்கு திசை இந்திரனுக்கு சொந்தமானது. இதனால் அவரது கட்டளைக்குட்பட்ட புதனும், குருவும் அறிவைக் கொடுப்பார்கள். மேற்கு திசையின் அதிபதியான மகாலட்சுமி செல்வத்தை வாரி வழங்குவதில் ஆச்சர்யமில்லை. வடக்கு திசை ருத்திரனுக்கு உறைவிடம் எனவே, அது நோயை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. தெற்கு திசை எமனுக்கு உரியது. தர்மத்தின் தலைவனான எமன் நீங்காத புகழைத் தருபவன். அதைப்போலவே தனது வீட்டைத் தவிர உறவினர், நண்பர்கள் வீட்டில் உண்ணும்போது மேற்கு திசையை நோக்கி உண்ணக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அந்த உறவு கெட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

உணவை எப்போதும் கைகளால்தான் உண்ண வேண்டும். நன்கு சுத்தம் செய்த கரத்தால் உண்பதே பல நோய்களை வரவிடாமல் தடுக்கும். கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது உடலின் நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடைபெறுகிறது. ஐந்து விரல்களையும் குவித்து உண்பது ஒரு சூட்சும முத்திரை நிலை. இதனால் ஜீரண மண்டலம் துரிதமாகச் செயல்படுகிறது.

விரதம் இருக்கும்போதும், சந்திர, சூரிய ஆதிக்கம் அதிகம் இருக்கும் நாட்களிலும் அசைவம் தவிர்ப்பது ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் ஒப்புக்கொள்ளும் ஒரு நல்ல வழிமுறைதான்.

சனியின் ஆதிக்கம் கொண்ட ஒருவர் காரத்தை அதிகம் உண்பதும், குருவின் ஆதிக்கம் அதிகம் இருப்பவர் இனிப்பை விரும்பி உண்பதும் சகஜம் என்கிறது ஜோதிடம். ராகு ஆதிக்கம் கொண்டவர் உணவு விரும்பியாக வறுத்தது, பொறித்தது என பலவாறு உண்பார்கள் எனவும் கூறுகிறது. எனவே, ஒருவரின் உணவு விருப்பம் கூட, கோள்களின் ஆதிக்கத்தால் நடப்பதுதான் என ஜோதிடம் கூறுகிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை யாராவது ஒருவருக்கு உணவை தானமிட்டுவிட்டு அதன் பிறகே உண்ண வேண்டும். முக்கிய நாட்களில் தெய்வங்களுக்கு படையல் இட்ட பிறகும், அமாவாசை போன்ற நாட்களில் பித்ருக்களுக்கு உணவிட்ட பிறகும், எல்லா நாள்களிலும் மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் முடிந்தவரை உணவிட்டு விட்டு பிறகே உண்ண வேண்டும். அதிதி ஒருவரை வைத்துக்கொண்டு ஒருவன் தனியே உணவு உண்ணக்கூடாது.

விபூதி இட்டுக்கொள்ளாமல் உண்பதோ, குளிக்காமல் உண்பதோ தவறு. பேசிக்கொண்டோ, பெரும் சத்தம் எழுப்பிக்கொண்டோ, கைகளை ஊன்றிக்கொண்டோ உண்பது தவறு. உணவைச் சிந்துவதும், அலட்சியமாக உண்பதும் உணவுக்கு இழுக்கு ஏற்படும் செயல்களாகும். விரல்களைத் தாண்டி உள்ளங்கை நனைவது கூட சாப்பிடும் முறை அல்ல. ஒழுங்காக தகுந்த மரியாதையோடு பிறர் முகம் சுழிக்காத வகையில் நாம் உணவு உண்ணும் முறை இருக்க வேண்டும்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT