1938 ஆம் ஆண்டில், ஹாவர்ட் யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆய்வாளர்கள், மக்களுக்கு எது உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக பல நிலைகளில் உள்ள 724 ஆண்களை ஒன்றிணைத்து, அவர்கள் வாழ்க்கை பற்றிய பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
இந்த ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் விதமாக பெரும்பாலான ஆண்கள், நாம் சோசியல் மீடியாக்களில் பார்ப்பது போல பணம், புகழ், சாதனை, பெரிய வீடு, அழகிய கார் போன்றவை மகிழ்ச்சியைத் தருகிறது என்ற பதிலைக் கூறவில்லை. அதற்கு மாறாக இன்றளவும் எல்லா மனிதர்களாலும் சிறப்பாக அமைத்துக் கொள்ளும் ஒன்றான நேர்மறை உறவுமுறையே அவர்களுக்கு பூரண மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார்கள்.
நீங்கள் நினைக்கலாம், ஒரு உறவுமுறை நமக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளிக்கப்போகிறது? என்று. ஆனால் உண்மையிலேயே அதன் மகிழ்ச்சியை உணர்ந்தவர்கள், ஆத்மார்த்தமாக அதை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை. எனவே மனிதர்களிடம் உங்களுடைய உறவுமுறையை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுத் தரும்.
நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் சிறப்பான உறவு முறையை அமைத்துக் கொண்டால், நீங்கள் அனைவருக்கும் பிடித்த நபராக மாறலாம். அத்துடன் மேற்கொண்டு நான் சொல்ல போகும் 4 விஷயங்களையும் பின்பற்றினால் அனைவரும் உங்களை ரசிப்பார்கள்.
மனிதர்களின் இயல்பை புரிந்துகொள்ளுங்கள்: எந்த ஒரு நபரும் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்க மாட்டார்கள். மனிதர்கள் ஒவ்வொருவருமே வித்தியாசமானவர்கள். எனவே அவர்களின் தன்மை இப்படி தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, எதிர்பார்ப்புகளின்றி பிறரிடம் பழகுங்கள். இந்த தெளிவு உங்களுக்கு ஏற்பட்டுவிட்டாலே நீங்கள் பிறரிடம் பழகும் விதம் முற்றிலும் மாறிவிடும். அனைவரும் சராசரியாக பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். இந்த குணம் பிறருக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும்.
மற்றவரின் தேவையறிந்து செயல்படுங்கள்: உங்களைச் சுற்றியுள்ள நபர்களில் சிலர் ஒரு விஷயத்தை சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். “நான் அவர்களுக்காக எல்லாமே செய்கிறேன். ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்று”. என்னதான் நாம் விரும்பும் நபர்களுக்காக நாம் எல்லாமே செய்தாலும், அந்த குறிப்பிட்ட நபருக்கு நாம் செய்யும் விஷயங்கள் பிடித்திருக்கிறதா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு மீனுக்கு ஸ்ட்ராபெரி பழங்களையும், ஐஸ்கிரீமையும் கொடுத்தால் அதற்கு பிடிக்காது. அந்த மீனுக்கு வேண்டியது என்னவோ வெறும் புழுக்கள் மட்டுமே. எனவே மீனை நீங்கள் கவர வேண்டுமெனில் மீனுக்கு பிடித்த புழுக்களை உணவாகக் கொடுங்கள்.
தெளிவாக பேசுங்கள்: ஒரு நபர் எப்படி பேசுகிறார் என்பதை வைத்து அவர் எந்த அளவுக்கு சிறப்பானவர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே நீங்கள் எங்கே, யாரிடம், எப்படி பேசுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. முடிந்தவரை ஒருவரிடம் பேசும்போது உங்களைப் பற்றி மட்டுமே சிறப்பாக பேசாமல், அந்த நபருக்கு பிடித்தமான விஷயங்களைப் பேசும்போது, அவர்களுக்கு நீங்கள் சிறப்பான நபராகத் தெரிவீர்கள்.
வெளிப்படையாக இருங்கள்: ஒரு உறவு முறை சிறப்பாக இருக்க வேண்டுமெனில், அதில் வெளிப்படை தன்மை மிகவும் முக்கியம். சில நபர்கள் வெளிப்படையாக பேசாமல் அனைத்தையும் மனதுக்குள்ளயே வைத்து மற்றவர்களாகவே புரிந்து கொள்ள வேண்டுமென நினைப்பார்கள். இது பல சமயங்களில் உறவுமுறைக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே எதுவாக இருந்தாலும் வெளிப்படைத்தன்மை மிக முக்கியம்.