Motivation Image Image credit - pixabay.com
Motivation

அச்சத்தை வெல்ல உதவும் 7 அழகான குறிப்புகள்!

எஸ்.விஜயலட்சுமி

பொதுவாக பய உணர்ச்சி என்பது எல்லோருக்கும் உண்டு. பலருக்கும் பாம்பு என்றால் பயம். சிலருக்கு மேடைப் பேச்சு, புதியவர்களிடம் பழகுவது புதிய முயற்சிகளை தொடங்குவது போன்றவற்றில் பயம் இருக்கும். பயத்தை களைந்து வாழ்க்கையில் வெற்றி கொள்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

1. பயத்தை ஒப்புக் கொள்ளுங்கள்.

இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். பயம் என்பது ஒரு சாதாரணமான உணர்ச்சிதான். அதற்காக அவமான உணர்ச்சியோ அல்லது குற்ற உணர்ச்சியோ தேவையில்லை. உங்களுக்கு எந்த விஷயத்தில் பயம் என்று சரியாக அறிந்து கொள்வது அவசியம். நிதானமாக சிந்தித்து எந்தெந்த விஷயங்களில் பயப்படுகிறீர்கள் என்பதை ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளவும். 

2. காரணத்தை அறிதல்;

எதனால் அந்த பயம் உண்டாயிற்று என்று யோசிக்கவும். சிலருக்கு மேடைப்பேச்சு என்றால் பயம்.  முன்பே ஒரு முறை மேடை ஏறி பேச தெரியாமல் தட்டு தடுமாறி உளறி பார்வையாளர்களின் கிண்டல் பேச்சுகளை பரிசாக பெற்ற அனுபவம் இருக்கும்.  இதுபோன்று எந்தெந்த விஷயங்களில் ஏன் பயப்படுகிறீர்கள் என்ற காரணத்தையும் கண்டறிய வேண்டும்.

3. மனநிலையை மாற்றுங்கள்

மனம் என்பது நமக்கு எஜமான் அல்ல நாம் தான் அதற்கு எஜமானர் என்று உணர வேண்டும். நான் இந்த விஷயத்தில் இதற்காக அச்சப்படுகிறேன் என்கிற எண்ணத்தை முதலில் மனதில் இருந்து களைய வேண்டும். அந்த அச்சத்தை தைரியத்தோடு என்னால் எதிர்கொள்ள முடியும். பயத்தை வீழ்த்த முடியும் என்று உறுதியாக எண்ண வேண்டும். இதனால் உங்கள் மனநிலை மாறும்.

4. பயிற்சி செய்தல்

பொதுவாக பயம் என்பது அறியாமையின் காரணமாக எழுவது. மேடைப்பேச்சு பயம் என்பது நமக்கு சரியாக பேசத் தெரியாது என்ற அச்சத்தினால் விளைந்தது. எனவே அதற்குரிய தகுதிகளை தேடிக்கொள்ள வேண்டும். மேடையில் பேசும் அளவு அறிவை தேடி வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுத்து பேசி பழக வேண்டும். வீட்டில் உள்ள நான்கு பேர் முன்பு பேச வேண்டும். பின்பு நண்பர்கள் முன்பு பேச வேண்டும். இப்படி பயிற்சி செய்யும் போது மேடை பயம் காணாமல் போய்விடும். ஒரு பெரிய கூட்டத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் வந்துவிடும். 

5. தளர்வு பயிற்சி 

ஒரு செயலை செய்யும் முன்பு பதட்டம், பயம், படபடப்பு ஆகியவை எட்டிப் பார்க்கும் எனவே தினமுமே தியானம் ஆழ்ந்த சுவாசபயிற்சி போன்றவற்றை 20 நிமிடங்களுக் காகவது செய்ய வேண்டும். ஒரு முயற்சியில் இறங்கும் போது இரண்டு நிமிடம் ஆழ்ந்த சுவாசம் பயிற்சி செய்து விட்டு அந்த செயலை செய்ய ஆரம்பிக்கும்போது அச்சம் காணாமல் போய்விடும். 

6. காட்சிப்படுத்துதல் 

நேர்முகத் தேர்வுக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மனதில் காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும். தைரியமாக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடன் பதில் அளிப்பதாக கற்பனையில் காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும். நான்கு ஐந்து முறை இந்த காட்சிப்படுத்துதலை செய்து வந்தாலே தன்னம்பிக்கையும் தைரியமும் வந்து விடும். நேர்முகத் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளலாம். 

7. விடாமுயற்சி 

பயத்தை வெல்வது என்பது நேரத்தையும் முயற்சியையும் எடுக்கும் ஒரு செயல்முறையாகும். அதில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் பொறுமை காக்க வேண்டும்.  பயத்தை எதிர்கொள்ள நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிதான். மேடைப் பேச்சின்போது சில நொடிகளுக்கு பேச வந்தது மறந்து போனால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. அடுத்த முறை நன்றாக பேசுவோம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். மீண்டும் முயற்சி செய்யும்போது அச்சம் காணாமல் போய், முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT