What people living in poverty shouldn't spend money on? 
Motivation

வறுமையில் வாழ்பவர்கள் எதற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது தெரியுமா?  

கிரி கணபதி

இன்றைய காலத்தில் வறுமை என்பது பலரை வாட்டி வதைக்கிறது. வறுமையில் இருப்பவர்கள் அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே போராடிவரும் நிலையில், சிலர் தான் சம்பாதிக்கும் பணத்தை தேவையற்ற பொருட்களை வாங்கி வீணடிக்கின்றனர். இது அவர்களது நிதி நிலைமையை மேலும் மோசமாக்கி கடன் சூழலில் சிக்க வைக்கும். இந்தப் பதிவில் வறுமையில் இருப்பவர்கள் எதுபோன்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். 

விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள்: புதிய ஸ்மார்ட்போன்கள் டிவிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் அவை பெரும்பாலும் தேவையற்றவைதான். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவதற்கு பதிலாக செகண்ட் ஹாண்ட் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம் அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் சாதனங்களை வாங்கலாம். 

விலை உயர்ந்த ஆடைகள்:  ஏழையாக இருப்பவர்கள் தங்களை பணக்காரர்கள் போல காட்டிக் கொள்ள ஆடைகளுக்கு அதிக செலவு செய்வது தவறு. சுற்றி இருப்பவர்கள் தன்னை சிறப்பாக பார்க்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் பேஷன் பொருட்களை வாங்குவது, வறுமையில் இருப்பவர்களுக்கு மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். 

சந்தா சேவைகள்: ஸ்மார்ட்போன் வந்த பிறகு பல OTT தளங்கள் வந்துவிட்டன. அவை அனைத்திற்கும் மாதச் சந்தா செலுத்தி பயன்படுத்தலாம். வறுமையில் இருப்பவர்களுக்கு இது முற்றிலும் தேவையற்றது. இதுபோன்ற தளங்கள் நமது நேரத்தை அதிகமாக வீணடிக்கச் செய்யும் என்பதால், இதற்காக பணத்தையும் செலவு செய்து நேரத்தையும் வீணடிப்பது, உண்மையிலேயே நல்லது கிடையாது. 

போதைப் பொருட்கள்: மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் ஒருவரது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, பணத்தையும் வீணடிக்கும் பழக்கங்களாகும். குறிப்பாக வறுமையில் இருப்பவர்கள், இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகும்போது அதிகப்படியான பணத்தை இழக்கின்றனர். 

சூதாட்டம்: ஏழைகளிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், விரைவாக பணக்காரன் ஆக வேண்டும் என்ற முயற்சிப்பதுதான். அதில் ஒரு வழிதான் சூதாட்டம். இதுபோன்ற குறுக்கு வழி செயல்களில் ஈடுபடுவது உங்களது வெற்றி வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும். மேலும் உங்களது பணத்தையும் அதிகமாக இழக்கச் செய்யும். 

விலையுயர்ந்த உணவு: வறுமையில் இருப்பவர்கள் முடிந்தவரை ஒரு நிலையை எட்டும் வரை சிக்கனமாக இருக்க வேண்டும். ஆனால், பலர் வீட்டு உணவுகளை விட, அதிக விலை கொடுத்து ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு, பணத்தையும் வெகுவாக இழக்கின்றனர். வெளியே சென்று சாப்பிடுவதை விட வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது உங்களது பணத்தை வெகுவாக மிச்சப்படுத்தும். 

விலையுயர்ந்த போக்குவரத்து: சில பந்தா பேர்வழிகள், கையில் பணம் இல்லை என்றாலும், பிறர் முன்னிலையில் கெத்து காட்ட வாடகைக்கு கார் எடுத்து பயணிப்பார்கள். அதேபோல லோன் போட்டாவது கார் ஒன்றை வாங்கி வீட்டில் சும்மா நிறுத்தி வைப்பார்கள். இதுபோன்ற நிதித் தவறுகளை வறுமையில் இருப்பவர்கள் செய்யவே கூடாது. முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி, பணத்தை மிச்சப்படுத்தப் பாருங்கள். 

வறுமையில் இருப்பவர்கள் தங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவது முக்கியம். தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்ப்பதன் மூலம் அவர்கள் தங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும், எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்கவும் முடியும். 

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT