சிவபெருமான் 
ஆன்மிகம்

‘சிவயநம' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை தெரியுமா?

ம.வசந்தி

‘சிவயநம' என்ற ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகக் கூறினால், இந்தப் பிறவியில் இருந்து விடுபடலாம். ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரும் பாக்கியத்தைப் பெற்றவர் நாரத முனிவர். ஒவ்வொரு நொடியும் நாராயணரின் நாமத்தை உச்சரித்தபடியே இருக்கும் வரத்தைப் பெற்றவர் நாரதர். அவர் ஒரு நாள்   பிரம்ம தேவரிடம் சென்று, "தந்தையே, சிவ நாமங்களில் உயர்ந்தது 'சிவயநம' என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன?” என்று வினவினார்.

"நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உனது சந்தேகத்தைக் கேள்" என்றார். நாரதரும்  வண்டு அருகில் சென்று தனது  சந்தேகத்தைக் கேட்ட மறுநொடியே சுருண்டு விழுந்து இறந்தது. இதைப் பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி, பிரம்மாவிடம் ஓடிச் சென்று, "தந்தையே, சிவயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்" என்றார்.

"நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ, அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் போய் கேள், அது பதிலளிக்கும்" என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா. நாரதரும் ஆந்தையிடம் சென்று  கேட்க, அதுவும் வண்டைப் போலவே, கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறி விட்டார். மீண்டும் பிரம்மாவிடம் சென்று, "என்ன இது சோதனை?" என்று கேட்டார்.

பிரம்மனோ, "நாரதா உனக்கு இன்னும் விளங்க வேண்டும் என்றால், அதோ அங்கிருக்கும் வீட்டில் இப்போதுதான் ஒரு கன்று பிறந்துள்ளது. அதனிடம் சென்று கேள். பதில் கிடைக்கும்" என்றார். நாரதரும், கன்றிடம் சென்று அதே கேள்வியைக் கேட்க, கன்றும் உடனே தனது உயிரை விட்டது. நாரதருக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. அதனால் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

'இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது? பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதியே இப்படி என்றால், இதைக் கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும்' என நினைத்தார் நாரதர். அப்போது, அங்கு வந்த பிரம்மா, நாரதரிடம் "கன்றும் இறந்து விட்டதா? சரி பரவாயில்லை. இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிட ம் போய் இதற்கு விளக்கம் கேள்" என்றார்.

இதைக் கேட்ட நாரதர் அலறிவிட்டார், "பிரம்ம தேவா, என்ன இது சோதனை? அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால், குழந்தையின் இறப்புக்குக் காரணமானவனாக நான் மாறி விடுவேனே" என்றார்.

உடனே பிரம்ம தேவர், "இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது, அவ்வளவுதான். அதனால் குழந்தையிடம் சென்ற கேள். பொருள் நிச்சயம் தெரியும்" என்றார்.

நாரதர் கை, கால் நடுங்க குழந்தையிடம் சென்று கேட்க, அந்தக் குழந்தை பேசியது. "நாரதரே, இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். அதன் பின் கன்றாகப் பிறந்தேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப் பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்" என்று குழந்தை கூறியது.

நாரதர் இப்போது பிரம்மனிடம், “சி' என்றால் சிவம்; 'வ' என்றால் திருவருள், 'ய' என்றால் ஆன்மா, 'ந' என்றால் திரோத மலம், 'ம' என்றால் ஆணவமலம். திரோத மலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு அதை சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்” என்று விளக்கினார்.

நாமும் 'சிவயநம 'என்ற மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து பிறவிப் பலனை பெறுவோம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT