Do you know where is the divine land by Hayagriva, the god of education?
Do you know where is the divine land by Hayagriva, the god of education? https://www.marvelmurugan.com
ஆன்மிகம்

கல்விக் கடவுள் ஹயக்ரீவர் அருளும் திவ்ய தேசம் எங்குள்ளது தெரியுமா?

சேலம் சுபா

லகின் அழியாத செல்வம் என்றால் அது கல்வி மட்டுமே. எவராலும் பறிக்கவோ  திருடவோ முடியாத ஒன்று கல்வி. அத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக விளங்குபவள் சரஸ்வதி தேவி. சரஸ்வதி தேவிக்கே குருவானவர்தான்  ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர்.

பிரம்மாவின் படைத்தல் தொழிலுக்கு உதவிய நான்கு வேதங்களையும் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பேராசையின் காரணமாக குதிரை வடிவில் வந்து திருடிச் செல்ல, இதன் காரணமாக உலகம் படைத்தல் தொழிலின்றி இருள் சூழ்ந்தது. எனவே, பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட, மகாவிஷ்ணு குதிரை முகம், மனித உடல், கண்களாக சூரிய, சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி,  சூரியனையே  விஞ்சக்கூடிய தெய்வீக ஒளியுடன் திருவடிவம் கொண்டு அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டார். அசுரர்கள் கை பட்டதால் பெருமை குன்றியதாக வேதங்கள் தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் விளங்கிய பெருமாள் வேதங்களை உச்சி முகர அவரது மூச்சுக்காற்றால் வேதங்கள் புனிதமடைந்ததாக ஐதீகம்.

அசுரர்களிடம் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்ததால் அவரை குளிர்விக்க மகாலட்சுமி தாயார் அவரது மடியில் அமர்ந்தாள். லட்சுமி ஹயக்ரீவர் என அழைக்கப்படும் இவர் வேதங்களை மீட்டவர் என்பதால் கல்விக்கு தெய்வமாகின்றார். கல்வி உள்ள இடத்தில் செல்வம் தானே சேரும் என்பதால் மகாலட்சுமியை இடது பக்கம் அமர்த்தி அருள்புரிகிறார் என்பது ஐதீகம்.

இத்தனை சிறப்புமிக்க ஹயக்ரீவருக்கு என்று தனிக்கோயில்கள் அதிகம் இல்லை. ஆனால், பெருமாளின் 108 திவ்ய தேசத் தலங்களுள் 41வது திவ்ய தேசமாக அமைந்துள்ள கடலூர் மாவட்டம், திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் ஆலயத்தில் தென்னிந்தியாவில் ஹயக்ரீவருக்கு தனி கோயில் அமைந்துள்ளது. தற்போது அயிந்தை என்று அழைக்கப்படுகிறது இத்தலம்.

திராவிட கட்டடக்கலைப்படி கட்டப்பட்டுள்ள இக்கோயில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவருக்காக உண்டாக்கப்பட்டது என்பதற்கு சான்றாகிறது மலை மீது அமைந்த கோயிலாகும். இத்தலத்தில் பெருமாள் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருவதால், பிரம்மனுக்குரிய தாமரையை ஒரு கரத்திலும், சிவனுக்குரிய முக்கண்ணுடனும் காட்சி தருவது சிறப்பு. தாயார் தவம் செய்து பெருமாளை மணந்த தலம் என்பதால் இக்கோயிலில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், ஆதிகேசவ பெருமாள், ஆழ்வார்கள், அனுமன், கருடனுக்கு தனித்தனியே சன்னிதிகள் உள்ளன. ராமர், ஹயக்ரீவர் ஆகியோரும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர். தென்னிந்தியாவில் பழைமையான கோயில்களில் ஹயக்ரீவருக்கு தனிச் சன்னிதி இருப்பது இக்கோயிலில் மட்டுமே.

திருமாலின் தாகம் தீர்க்க ஆதிசேஷன் உருவாக்கிய தீர்த்தம், முனிவரின் சாபத்தால் கலங்கிய நீர் என இக்கோயில் வரலாறு பல சிறப்புகள் கொண்டது எனினும் இங்கு கல்விக் கடவுளான ஹயக்ரீவரை வழிபடுவது ஞானம் தருவது பெரும் சிறப்பாகும்.

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

SCROLL FOR NEXT