Do you know where Navabhashana Navagraha Temple is?
Do you know where Navabhashana Navagraha Temple is? https://www.alayathuligal.com
ஆன்மிகம்

நவபாஷாண நவக்கிரக கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்கிற தலத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில். இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளதால்  இக்கோயிலின் தொன்மையை குறிப்பிட்டுச் சொல்ல இயலாததாக இருக்கிறது. ஆனால், குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் இந்த நவக்கிரக கோயில் உள்ளது என்றும், இத்தனை ஆண்டு காலத்திற்கு பக்தர்கள் இங்கு வந்து தங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர் என்றும் வரலாறு நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

புராண காலத்தில் இந்த ஊர் தேவிபுரம் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலின் இறைவனான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த நவக்கிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். இந்தக் கோயிலின் புனித தீர்த்தமாக கடல் நீரே இருக்கிறது.

மகிஷாசுரன் என்னும் அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இக்கொடுமைகளைப் பற்றி பராசக்தியிடம் தேவர்கள் கூறியபோது தேவர்கள் மற்றும் அனைத்து லோகங்களையும் காக்க மகிஷாசுரனுடன் போரிட பராசக்தி இங்கு வந்தபோது மகிஷாசுரன் இங்கிருக்கும் கடலான சக்ர தீர்த்தத்தில் ஒளிந்து கொண்டான்.

அவனை தனது சக்தியால் வெளியே கொண்டு வந்து தேவி வதம் செய்து பின்பு அவனுக்கு சாப விமோசனம் வழங்கியபோது தேவர்கள் அனைவரும் அமிர்தத்தை பொழிய அன்று முதல் தேவிபுரம் என்னும் இந்த ஊர் தேவிபட்டினம் என அழைக்கப்படலாயிற்று. இங்கிருக்கும் கடலில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தனது கைகளாலேயே பிரதிஷ்டை செய்த நவக்கிரகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு நவபாஷாண சக்தி இருப்பதாகக் கருதப்படுவதால் இவை நவபாஷாண நவக்கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன.

இங்கு ஸ்ரீராம பிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாகவும், சிவன் மற்றும் பார்வதி தேவியின் காட்சி கிடைத்து அவர்களின் ஆசிகளுடன் ராவணனுடனான போரில் ஸ்ரீ ராமர் வெற்றி பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் கடல் நீரில் இருந்தாலும் இன்றும் அந்த நவக்கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. ஸ்ரீராமர் தனது கைகளாலேயே கடலுக்கு நடுவில் பிரதிஷ்டை செய்த நவக்கிரகங்கள் இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகும்.

இந்த நவக்கிரகங்களுக்கும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம், ஆராதனை போன்றவற்றை செய்யலாம் என்பது விசேஷமாகும். இந்தக் கோயிலின் கடல் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவக்கிரகங்களுக்கு நவதானியங்கள் சமர்ப்பித்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு அன்னதானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் போன்றவை நீங்குகிறது. மேலும், நவக்கிரக தோஷ நிவர்த்திக்கும், பித்ரு சாபங்கள், முன்பிறவி பாவங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க சிறந்த பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

SCROLL FOR NEXT