பொதுவாக, ஒரு கோயிலின் கருவறையில் ஒரு மூலவர்தான் இருப்பது வழக்கம். அரிதாக மிகச் சில கோயில்களில் மட்டுமே இரண்டு மூலவர்கள் குடி கொண்டிருப்பர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என்ற இரு மூலவர்கள் அருள்பாலிக்கின்றனர்.
இந்தக் கோயில் ஸ்ரீரங்கத்தை விட மிகவும் பழைமையான கோயில் ஆகும். அதனால் இது, ‘ஆதிரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. 1000 முதல் 2000 ஆண்டுகள் பழைமையான கோயில் இது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
சத்தியகிரி மலைச்சரிவில் அகழப்பட்டுள்ள இரண்டு குடைவரைகளில் கீழ்ப்புறத்தில் உள்ள குடைவரையில் திருமெய்யர் கருவறையில் குடிகொண்டுள்ளார். இந்த பள்ளிகொண்ட பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை விட பெரிய உருவம் கொண்டவர். இந்தியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் கோயில் இது என்கிறார்கள்.
இன்னொரு மூலவர் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் திருநாமம் கொண்டு காட்சி தருகிறார். ‘தன்னை வழிபடும் பக்தருக்கு சத்தியமாக அருள் புரிவேன்’ என்று உறுதி அளித்ததன் காரணமாக இவருக்கு சத்தியமூர்த்தி என்று பெயர் வந்தது என்கிறது தல புராணம்.
சிவபெருமானே நாரதருக்கு இத்தல பெருமைகளை எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. சத்தியகிரி என்னும் இந்த மலை சாளக்ராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்து 60 அடி தொலைவிலேயே சிவபெருமானுக்கும் இங்கே கோயில் உள்ளது. ஒரே வாயிலின் வழியாகச் சென்று சிவனையும் பெருமாளையும் வழிபடும் வகையில் அமைந்துள்ள இந்தக் கோயில், சைவ - வைணவர் ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழ்கிறது.
இங்குள்ள தாயாரின் பெயர் உஜ்ஜீவனத் தாயார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குணமாகும் என்ற நம்பிக்கை தரும் பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.