கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் "ஶ்ரீ விட்டல் ருக்மிணி சமஸ்தானம்" ஆலயம் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக வைபவம் கடந்த ஜனவரி 27-ம் தேதி தொடங்கி, நாளை மறுநாள் (பிப்ரவரி 11) வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் ஆலயம் எவ்வாறு உலக பிரசித்தி பெற்று விளங்குகிறதோ, அதே சாயலில் இந்த கோயிலும் அமைக்கப்பட்டு அதே அளவு சாந்நித்யத்தோடு விளங்குகிறது.
காவிரி ஆற்றங்கரையில் ஒரு அரண்மனை போல வீற்றிருக்கும் இந்த கோயிலை நிறுவியவர் 'ஶ்ரீ விட்டல் தாஸ் மகராஜ்'. இங்கே கோயில் வளாகத்தினுள் பெரிய கோசாலை, பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் ஆகியவையும் பெரிய நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளது. அதனுள் அமைந்த ஆலயத்தில் அமைதியாக வீற்றிருக்கிறார் ஶ்ரீ ருக்மிணி சமேதராக விட்டலன்.
பதினாறு நாட்கள் சிறப்பாக ஒரு திருவிழா போல நடக்கும் இந்த கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான வேத விற்பன்னர்களும், பாகவதர்களும், பக்தர்களும் வந்திருந்து பங்கேற்று இறை அருளை பெறுகின்றனர். இந்த ஷேத்திரத்தை பற்றி மேலும் அறிய கல்கி ஆன்லைன் யூடியூப் சேனலில் எங்கள் வீடியோவை காணவும்.