செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை நீர்வீழ்ச்சியா? பாயும் குற்றவியல் நடவடிக்கை !

கல்கி டெஸ்க்

மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டது குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு சட்டவிரோத தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்ததால், அந்த குத்தகை ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு , மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தனியார் விடுதிகள், எஸ்டேட்களில், அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, இயற்கை நீரோட்டத்தை தடுத்து சட்ட விரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

மேலும் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்டுகள் உள்ளிட்டவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.வணிக நோக்கில், இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு சட்டவிரோத தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால், அந்த குத்தகை ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

அதனடிப்படையில் அந்த ஆதீனத்தின் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டு, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீதும், அதற்கு துணை நின்ற அலுவலர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில், சுற்றுலாப் பயணியரை ஈர்ப்பதற்காக சில தனியார் விடுதிகள் இயற்கையான குளம், அருவி, ஓடைகளின் நீர் வரத்தை தடுத்துள்ளன. இதனால் வனத்தில் வாழும் விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக, மேற்கு தொடர்ச்சி மலையை, 'யுனெஸ்கோ' எனும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாசார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதனால்சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.



சின்ன விஷயத்துக்கெல்லாம் குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் தெரியுமா?

சிறுகதை: காவு வாங்கிய பிஸ்கெட்!

கிரக தோஷங்களைப் போக்கும் தலையாட்டி விநாயகர்!

வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!

சங்கு ஒலிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

SCROLL FOR NEXT