
பொதுவாக, கோயில்களில் ஊஞ்சல் ஸேவை நடப்பதை நாம் பார்த்திருப்போம்! அதில் பெருமாள், திருமகளோடு சேர்ந்து ஊஞ்சல் ஸேவை கண்டருளும்போது அவரது எண்ணத்தில் என்ன தோன்றும் என்பதை ஸ்ரீநிதி ஸ்வாமிகள் தம்முடைய ‘வஸுமதிஷதகத்தில்’ மிக அழகாகக் குறிப்பிட்டிருப்பார். தன்னுடைய ஊஞ்சல் ஸேவையைக் காண வரும் பக்தர்களை சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டு ஊஞ்சலில் ஆடும் திருமாலுக்கு, அந்தப் பக்தர்களைப் பார்க்கும்போது அவர்கள் செய்த பாவங்கள் அவரது மனதில் நிழலாடுமாம். உடனே அந்தப் பக்தனுக்கு அதற்கேற்ற தண்டனையைத் தர வேண்டும் என அவர் நினைப்பாராம். அப்படி திருமால் நினைக்கும்போதெல்லாம், திருமாலில் திருமார்பிலேயே உறைந்திருக்கும் திருமகள், “அவர்களுக்குத் தண்டனை எதுவும் தராமல் உங்கள் கருணையை மட்டுமே காட்டுங்கள்” என்று சொல்லுவாளாம். திருமாலிடம் இருக்கும் அந்த ஆளுமை என்ற குணமோ ‘இல்லை இல்லை... இவர்களுக்குத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும்’ என்று சொல்லுமாம். ஆளுமையைக் காட்டுவதா அல்லது அருளைச் செய்வதா என திருமாலின் திருவுள்ளமும் அங்கே ஊஞ்சல் ஆடுகிறதாம். அவரது பக்கத்தில் இருக்கும் திருமகளில் ஸ்வரூபமான பூமாதேவி, பொறுமையின் இருப்பிடமல்லவா? அதனால் அவள் திருமாலிடம், “சற்றே பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி, “இதோ உங்கள் திருவடியில் சரணாகதி செய்தவர்களுக்கு அருளை மட்டுமே கொடுங்கள்” என்று கூறுவாளாம்.