அறிவியல் / தொழில்நுட்பம்

இனி வாகனம் வாங்கும் போது Electronic Stability Control இருக்கா என பார்த்து வாங்கவும்.

கிரி கணபதி

வாகன உற்பத்தியின் தொடக்கத்தில் அதன் பாதுகாப்பிற்காக பிரேக் மட்டுமே வழங்கப்பட்டது. ஆபத்து சமயங்களில் பிரேக் மட்டும்தான் பயணிகளை காக்கும் ஒரே கருவியாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி, சீட் பெல்ட், ஏர் பேக் என எக்கச்சக்கமான பாதுகாப்பு அம்சங்கள் வாகனங்களில் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன் வரிசையில் தற்போதைய நவீன கார்களில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, 'எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்' என்ற அமைப்பு புதிதாக வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக திடீரென்று வாகனத்தை திருப்பும் சமயங்களில் இந்த அம்சமானது சிறந்த கண்ட்ரோலையும், வாகனம் வழவழப்பான சாலையில் செல்லும்போது க்ரிப்பான அனுபவத்தையும் வழங்குகிறது. எனவே யாராவது புதிய காரை வாங்க விரும்பினால், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கும் காரை பார்த்து வாங்க வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

வாகனம் ஓட்டுவதற்கு சவாலான நேரங்களில் கூட சிறந்த கட்டுப்பாட்டை இந்த சிஸ்டம் வழங்கும். எனவே இந்த அம்சம் கொண்டிருக்கும் வாகனங்கள் விபத்தை சந்திப்பது அரிதானது என்கிறார்கள். அப்படியே ஏதாவது விபத்து ஏற்பட்டாலும், கடுமையான பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சிஸ்டம் பாதுகாக்கும் என்கிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சில மலிவு விலை கார்களிலும் வாகன உற்பத்தியாளர்கள் இதை வழங்கத் தொடங்கிவிட்டனர். 

இந்தியாவைப் பொறுத்தவரை விலை குறைவான சில கார் மாடல்களான டாடா டியாகோ, நிசான் மேக்னட், ரெனால்ட் க்விட் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய கார் வகைகளில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இந்த வகை கார்களின் விலை 4.5 லட்சத்தில் தொடங்கி 9 லட்சம் வரை மட்டுமே இருக்கும். இந்த அம்சமானது சென்சார்களைக் கொண்டு இயங்குவதால், கார் இயங்க ஆரம்பித்த உடனேயே சென்சார்களும் இயங்கத் தொடங்கிவிடும். 

வாகனம் தனது கட்டுப்பாட்டை இழப்பதை இந்த சென்சார்கள் கண்டறிந்தால், உடனடியாக அந்த கருவி பிரேக்குடன் இணைந்து செயல்படும். இவ்வாறு வாகனத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சத்தையும் இந்த கருவியே பார்த்துக் கொள்ளும். பொதுவாக, ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய பெயர்களில் இது அறியப்படுகிறது. தற்போது இந்தியாவில் சாலை விபத்துக்கள் பன்மடங்கு அதிகரித்து விட்டதால், இனி புதிய வாகனம் வாங்கினால் இந்த கண்ட்ரோலிங் சிஸ்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. 

பணம் படைத்தவர்கள் யார் வேண்டுமானாலும் வாகனம் வாங்கலாம். ஆனால் அத்தகைய வாகனத்தில் பாதுகாப்பு அம்சம் இருக்கிறதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். அவ்வகையில் புதிய வாகனம் வாங்க விரும்பினால், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். ஆபத்தான சூழல்களில் உங்களுக்கு சிறப்பான பாதுகாப்பை இது வழங்கும்.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT