சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஃபாஸ்ட்ஃபுட் உணவகமான மெக்டொனால்டு நிறுவனம், தற்காலிகமாக ரஷ்யாவில் உள்ள தனது அனைத்து கிளைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன. அந்த வகையில் ஆப்பிள், நெட்ஃபிளிக்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது மெக்டொனால்டும் இணைந்துள்ளது.
ரஷ்யாவில் தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான 850 கிளை உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு அறிவித்துள்ளது. இதே போன்று, ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.