டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ஒளிர்ந்து வரும் அமர் ஜவான் ஜோதியை இன்று அணைத்துவிட்டு, அதை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியுடன் ஐக்கியமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
முதல் உலகப் போரில் வீர மரணம் அடைந்த 70 ஆயிரம் இந்திய வீரர்களை நினைவு கூரும் வகையில் டெல்லியில் இந்தியா கேட் அமைக்கப்பட்டது. பின்னர் 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா–பாகிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இங்கு அமர் ஜவான் ஜோதியை நிறுவினார்.
இப்போது பாகிஸ்தான போரின் 50 ஆண்டுகளை கொண்டாடிய நிலையில், அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு சார்பில் தெரிவித்ததாவது;
இந்தாண்டு குடியரசு தின விழாவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இன்று இந்தியா கேட்டிலுள்ள அமர் ஜவான் ஜோதி நிரந்தரமாக அணைக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த ஜோதியை அணைக்கும் நிகழ்வு பாதுகாப்பு துறை மூலம் நடத்தப்படுகிறது. இரண்டு ஜோதிகளை பராமரிப்பது கடினமாக இருப்பதால் ஒன்றாக ஐக்கியமாக்குவதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
ராணுவ வீரர்களுக்காக 50 ஆண்டாக தொடர்ந்து ஒளிர்ந்து வந்த அமர் ஜவான் ஜோதியை மீண்டும் ஒளிரவைப்போம். சிலரால் தேசபக்தியையும், தியாகத்தையும் புரிந்துகொள்ள முடியாது.
–இவ்வாறு ராகுல்காந்தி தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமர் ஜவான் ஜோதியை நிரந்தரமாக அணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.