கனடாவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
உலகில் கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகளும் கொரோனா தடுப்புச்சியைக் கட்டாயமாக்கி வருகின்றன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. ஆனால் பல நாடுகளில் மக்கள் இத்தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டிவருகின்றனர். தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் அரசு தங்கள் உரிமையில் தலையிடுவதாக அவர்கள் சாடி வருகின்றனர்.
அந்த வகையில் கனடா அரசு, கொரோனா தடுப்பூசி செலுத்ததாத லாரி வகை டிரக் ஓட்டுனர்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. பொதுவாகக் கனடா -அமெரிக்கா எல்லையில் போக்குவரத்து சகஜமாக இருக்கும். இரு நாடுகளுக்கு இடையே சரக்கு வாகன சேவை தொடர்ந்து நடைபெற்று வரும். இந்தச் சூழலில் தான் இரு நாட்டு எல்லைகளைக் கடக்க வேக்சின் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இது கனடா நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து டிரக் ஓட்டுநர்கள் கனடா தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டிரக் ஓட்டுநர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், அதிக ஒலி கொண்ட ஹரன்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கடும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் கையை மீறிப் போவதாகவும் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதைச் சமாளிக்கும் அளவுக்கு போலீசார் தங்களிடம் இல்லை என ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டாவாவில் இந்த போராட்டம் காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர் போராட்டம் கனடா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டதால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து. ஆனால், இப்போது இந்த போராட்டம் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் இப்பிரச்சினையை ஜாகிரதையாக அணுகி சரியான முறையில் தீர்க்காவிட்டால் மேலும் சிக்கலாகி விடும். அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகிவிடும் என்கின்றனர் அரசியல் விமரிசகர்கள். ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மவுனம் சாதித்து வருவது அங்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.