தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுபெற்று இன்று மாலையில் ஜாவத் புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் வெளீயிட்டுள்ள தகவல்:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று மாலையில் ஜாவத் என்று பெயரிடப்பட்ட புயலாக வலுப்பெறும். மேலும் இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே கரையை நெருங்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால் வங்கக்கடல், ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
–இவ்வாறு இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.