ectopic pregnancy 
ஆரோக்கியம்

எக்டோபிக் கர்ப்பத்தால் உண்டாகும் ஆபத்துகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ருவானது கர்ப்பப்பையில் பதியாமல் கருக்குழாயில் பதிந்து வளர்வதே எக்டோபிக் கர்ப்பம் எனப்படும். பிரக்னன்சி டெஸ்ட் எடுத்தால் பாசிட்டிவ் வரும். ஆனால், அடிவயிற்றில் வலி, வாந்தி, தலைசுற்றல், மயக்கம் இருக்கும். ஸ்கேன் செய்து பார்க்க கர்ப்பப்பையில் கரு தெரியாமல் கருக்குழாயில் தெரியும். இதனை உடனடியாக கவனிக்காமல் விட்டால் கருக்குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்து உண்டாகலாம்.

அரிதாக சில சமயங்களில் கருப்பை வாய், கருப்பை அல்லது அடிவயிற்றில் எக்டோபிக் கர்ப்பம் ஏற்படலாம். இந்த கர்ப்பத்தின்போது கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே வளரும்போது இது நிகழ்கிறது. இது ஃபெலோபியன் குழாயில் அழுத்தம் கொடுக்கலாம் அல்லது வெடித்து ஆபத்தான உட்புற இரத்தப்போக்குக்கு வழி வகுக்கலாம்.

பொதுவாக, சாதாரண கர்ப்பத்தின்பொழுது கருவுற்ற முட்டை ஃபெலோப்பியன் குழாயிலிருந்து கீழே நகர்ந்து கருப்பைக்கு செல்லும். ஆனால், எக்டோபிக் கர்ப்பத்தில் முட்டை வழியில் சிக்கிக் கொள்கிறது. சில நேரங்களில் இது கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ அவசர நிலையாக மாறலாம். இது கவலைக்குரிய நிலை என்பதுடன் இரத்தப்போக்கு, வலி, வெடிப்புகளை உண்டாக்கி விடும் என்பதால் கருக்குழாயில் குழந்தை தங்கும் ஆபத்து குறித்து அறிவது அவசியம்.

எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

ஃபெலோபியன் குழாயின் வீக்கம் அல்லது கருப்பையின் தொற்று காரணமாக ஏற்படலாம்.

ஹார்மோன் சமநிலையின்மை அல்லது கருவுற்ற முட்டையின் அசாதாரண வளர்ச்சி காரணமாகவும் ஏற்படலாம்.

இடுப்பு அழற்சி நோய் மற்றும் கருவுறுதலுக்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள் போன்றவை எக்டோபிக் கர்ப்பத்தின் வாய்ப்பை அதிகரிக்கும்.

ஃபெலோபியன் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் கரு முட்டைகள் அவ்வளவு எளிதில் கருப்பையை அடைய முடியாது போகும். புகைபிடித்தல் எக்டோபிக் கர்ப்பத்திற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று.

எக்டோபிக் கர்ப்பத்தின் அறிகுறிகள்:

வயிறு மற்றும் இடுப்பு வலி: வயிறு அல்லது இடுப்பில் கூர்மையான குத்துதல் போன்ற உணர்வு அல்லது வலியை உணரலாம். இது பெரும்பாலும் ஒரு பக்கத்தில் தொடங்கி போகப்போக வலியின் அளவு அதிகமாகும்.

இரத்தப் போக்கு: பழுப்பு அல்லது கருமையான நிறத்துடன் இரத்தப்போக்கு காணப்படும்.

குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏக்டோபிக் கர்ப்பத்தின் அரிதான அறிகுறிகள் ஆகும். சாதாரண கர்ப்பத்தை போலவே குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.

தோள்பட்டை வலி: அசாதாரணமாக பொருந்திய கருமுட்டையை சுற்றியுள்ள திசு சிதைந்தால் உட்புற இரத்தப்போக்கு கடுமையாகி, அடிவயிற்றில் இரத்தம் தேங்குவது, தோள்பட்டை வலி மற்றும் கூர்மையான வயிற்று வலி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். ஃபெலோபியன் குழாய் உடைந்து இரத்தம் வந்தால் தோள்பட்டையில் வலியை உணர முடியும்.

தலைவலி, மயக்கம்: கடுமையான உட்புற இரத்தப்போக்கு மயக்கத்தையும், தலைவலியையும், லேசான தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தையும் உண்டாக்கும்.

நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை: இடுப்பு பரிசோதனை மூலமும், அல்ட்ரா சவுண்ட் இரத்த பரிசோதனைகள் மூலமும் மருத்துவர்கள் இந்நோயை கண்டறிந்து கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை கூறுவார்கள்.

எக்டோபிக் கர்ப்பம் என்பது மிகவும் சிக்கலான மருத்துவ நிலை. இதற்கான சிகிச்சையானது பல காரணிகளைப் பொறுத்து அமையும். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால் சிகிச்சை மூலம் ஃபெலோபியன் குழாயை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Laxman Temple: சூர்ப்பனகை மூக்கை லட்சுமணன் அறுத்த இடம்தான் இது!

சிறுகதை: சகுனம்!

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்! 

சுருள் வடிவில் அமைந்துள்ள நமது 'கேலக்ஸி'!

அஸ்வின் உலகின் சிறந்த வீரராக வருவார் என்று நினைத்தேன்! - பயிற்சியாளர்!

SCROLL FOR NEXT