

சிறந்த ஓய்வூதிய திட்டங்கள் என்பது நம் வயது, வருமான நிலை, மற்றும் ஓய்வு கால இலக்குகளைப் பொறுத்தது. சிறந்த ஓய்வூதிய திட்டங்கள் (best retirement plans) நம் தேவைகளை பொறுத்தது. ஆனால் இந்தியாவில் தேசிய ஓய்வூதியத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஈக்விட்டி-லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் போன்ற திட்டங்கள், எல்ஐசி யின் உடனடி வருமானம் தரும் திட்டங்கள் போன்றவை உள்ளன. இவை அனைத்துமே பாதுகாப்பான எதிர்காலத்திற்கு சேமிக்க உதவுகின்றன. பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருவாயை விரும்புபவர்களுக்கு அரசாங்கத் திட்டங்கள் சிறந்த தேர்வாக அமைகின்றன.
அரசு திட்டங்கள் (Government Schemes):
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System-NPS):
அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஓய்வூதிய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டம். இதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (NPS) அடங்கும். இது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்குகிறது. பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டிலும் முதலீடு செய்ய நெகிழ்வுத் தன்மையை (flexibility) வழங்குகிறது. பணியாளர் மற்றும் முதலாளி பங்களிப்புகளுக்கு வரிச் சலுகைகள் உண்டு. பணியாளர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.
அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana-APY):
இது அமைப்பு சாரா துறையில் பணிபுரிபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குறிப்பாக முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான உத்தரவாதமான ஓய்வூதிய வருமானத்தை வழங்குகிறது. 18 முதல் 40 வயது வரையிலான வரி செலுத்தாத இந்திய குடிமக்கள் இதில் சேரலாம். 60 வயதுக்குப் பிறகு, முதலீடு செய்த பங்களிப்பைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.1,000 முதல் 5,000 வரை உத்தரவாதமான குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும். குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தனியார் திட்டங்கள் (Private Schemes):
எல்ஐசி ஓய்வூதிய திட்டங்கள்:
LICயின் ஜீவன் அக்ஷய் (Jeevan Akshay) மற்றும் புதிய ஜீவன் சாந்தி (New Jeevan Shanti) போன்ற திட்டங்கள் பிரபலமாக உள்ளன. இவை குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான நிலையான வருவாயை வழங்குகின்றன. இது ஒரு வருமான திட்டம். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், அது வாழ்நாள் முழுவதும் நமக்கு உத்தரவாதமான மாத வருமானத்தை வழங்கும்.
சந்தை இணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் (Market-linked Pension Plans):
பங்கு (Equity) அல்லது கடன் (Debt) சந்தைகளில் முதலீடு செய்து செல்வத்தை வளர்க்க உதவுகின்றன. ஆனால் இது அதிக சந்தை அபாயங்களைக் கொண்டவை.
இம்மாதிரியான திட்டங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
வருமான உத்தரவாதம் இருப்பதால் ஓய்வுக்குப் பிறகு நிதி நெருக்கடி இல்லாமல் நிம்மதியாக வாழ உதவும்.
பல ஓய்வூதியத் திட்டங்கள் வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
சில திட்டங்கள் ஓய்வூதியத்துடன் நம் குடும்பத்திற்கும் பாதுகாப்பை வழங்குகின்றன.
சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
ஓய்வூதியத்திற்கு எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறோம் என்பதைப் பொறுத்து திட்டம் மாறும். ஓய்விற்குப் பிறகு உத்தரவாதமான வருமானம் வேண்டுமா அல்லது சந்தை வருமானத்தை விரும்புகிறோமா என்பதைப் பொறுத்து திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் ஒரு அரசு ஊழியராக இருந்தால் NPS அல்லது பழைய ஓய்வூதிய திட்டம் பொருத்தமாக இருக்கும். நீங்கள் சம்பளம் பெறுபவராக இருந்தால் EPF முதன்மையானது. அதனுடன் NPS அல்லது PPFல் கூடுதல் சேமிப்பைத் தொடரலாம். சுயதொழில் செய்பவராகவோ அல்லது அமைப்புசாரா துறையில் இருப்பவராகவோ இருந்தால் APY அல்லது NPS சிறந்ததாக இருக்கும்.
திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நிதி ஆலோசகரை அணுகி நம் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.