

வீடு அல்லது சொத்துகளை விற்று கிடைக்கும் மூலதன லாபத்தை உடனே புதிய சொத்தில் முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு, 1988 மூலதன ஆதாய கணக்குத் திட்டம் (CGAS) வரிவிலக்கு பெற உதவுகிறது. கணக்கு வகை A சேமிப்பு, வகை B கால வைப்பு என இரண்டாகும். விற்பனை தேதியிலிருந்து 2–3 ஆண்டுக்குள் வீடு அல்லது நிலம் வாங்க இந்தத் தொகையை பயன்படுத்த வேண்டும்; இல்லையெனில் வருமான வரி விதிக்கப்படும்.
வீடு அல்லது சொத்துக்களை விற்ற பணத்தை சற்று நிதானமாக யோசித்து முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? அதே நேரம் அதற்கு வரிவிலக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா? இப்படி யோசிப்பவர்களுக்குதான் 'மூலதன ஆதாய கணக்குத் திட்டம் 1988' (Capital Gains Account Scheme) உள்ளது.
சொத்து விற்பனை வாயிலாகக் கிடைக்கின்ற லாபத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் மற்றொரு சொத்தில் முதலீடு செய்யவேண்டும். அப்படி முதலீடு செய்யத் தவறினால் அதிக வரி செலுத்த வேண்டி இருக்கும்.
ஆனால் அந்த நிதி ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குள் புதிய சொத்து வாங்க முடியவில்லை என்றால், அந்தப் பணத்தை வங்கிகளில் உள்ள மூலதன ஆதாயக் கணக்கில் டெபாசிட் செய்து வரி விலக்கு கோர முடியும்.
ஆனால் வங்கிகள் கூறும் குறிப்பிட்ட காலத்துக்குள் மீண்டும் அந்தத் தொகையைக் கொண்டு, வீடு அல்லது சொத்துக்களை மட்டுமே வாங்க வேண்டும். அப்போதுதான் வரி விலக்கு கிடைக்கும். அதே நேரம் மூலதன ஆதாய கணக்கில் செய்யப்படும் டெபாசிட்டுக்கு வங்கிகள் வட்டியும் கொடுக்கும்.
மூலதன ஆதாய கணக்குத் திட்டம் என்பது:
மூலதன ஆதாய கணக்குத் திட்டம் (Capital Gains Account Scheme- CGAS 1988) என்பது ஒரு சொத்தை விற்றுக் கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 54 முதல் 54F வரை வரி விலக்குப்பெற உதவும் ஒரு முறையாகும். புதிய சொத்தில் உடனடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தலாம்.
அந்தத் தொகையை புதிய சொத்தில் முதலீடு செய்யும் வரை வங்கிகளில் சேமிக்க உதவும் அரசாங்கத் திட்டமாகும். இது கணக்கு வகை A (சேமிப்பு) மற்றும் கணக்கு வகை B (கால வைப்பு) என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.
கணக்கு வகைகள்:
கணக்கு A (சேமிப்பு கணக்கு):
இது வழக்கமான சேமிப்பு கணக்கு போன்றது. தினசரி தேவை களுக்கும் எளிதாகப் பணம் எடுக்கவும் பயன்படும்.
கணக்கு B (கால வைப்பு / பிக்சட் டெபாசிட்):
இது பிக்சட் டெபாசிட் போன்றது. குறிப்பிட்ட காலத்திற்குப் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்து அதிக வட்டி பெற உதவும்.
முக்கிய அம்சங்கள்:
வரிவிலக்கு:
புதிய சொத்து வாங்கும் வரை வரி செலுத்துவதைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம். நீங்கள் விற்பனை செய்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் புதிய குடியிருப்பு வீடு வாங்கவில்லை என்றால், உங்கள் கணக்கில் இருக்கும் மீதமுள்ள தொகை அல்லது மூலதன ஆதாயத் தொகைக்கு வருமான வரி வசூலிக்கப்படும்.
கால வரம்பு:
மூலதன லாபத்தை வீடு வாங்க 2 ஆண்டுகளுக்குள்ளும், நிலம் வாங்க 3 ஆண்டுகளுக்குள்ளும் பயன்படுத்த வேண்டும்.
கட்டுப்பாடுகள்:
இக்கணக்கிற்கு காசோலை புத்தகம் (செக் புக்), ஏடிஎம் கார்டு அல்லது இணைய வழி பணப்பரிமாற்றம் (UPI/NEFT) கிடையாது.
நீங்கள் புதிய சொத்து வாங்குவதற்காக மட்டுமே பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள். அதற்கு வங்கியில் படிவம் சி (Form C) மற்றும் உங்கள் பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
முதிர்வு காலத்திற்கு முன்பே TDR/STDR (கணக்கு B) ஐ மூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த வைப்புத் தொகைக்கு எதிராக எந்தக் கடன் வசதியும் கிடைக்காது. இந்த கால வைப்புத் தொகையை நிதி சாரா கடன்களுக்கு முன் பணமாகவோ அல்லது எந்த ஒரு நிதி சார்ந்த கடன் வசதிகளுக்கும் பிணையமாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது.
கணக்கு தொடங்கத் தகுதியானவர்கள்:
இந்தியக் குடியுரிமை பெற்ற தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர் (HUF), நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்(NRI) இந்தக் கணக்கைத் தொடங்கலாம். அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய அரசு அங்கீகரித்த சில தனியார் வங்கிகளில் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.
அதற்கு சொத்து விற்றதற்கான பத்திரப்பதிவு ஆவணம், மூலதன ஆதாய கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம், வாரிசுதாரர் விபரங்களை வங்கியில் சமர்ப்பித்து கணக்கைத் துவக்கலாம்.
உங்கள் சொத்து விற்பனை தொகையை கால வரம்பிற்குள் எவ்வாறு திட்டமிட்டு மறுமுதலீடு செய்வது மற்றும் எவ்வித அபராதமும் இன்றி வருமான வரி விலக்கைப் பூரணமாகப் பெறுவது எப்படி என்பதை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: