

சில சமயம் குடும்பத்தில் எதிர்பாராத மரணங்கள் ஏற்பட்டு அந்தக் கடினமான சூழ்நிலையில் இறந்த நபரினுடைய சொத்துக்கள், கணக்கு விவரங்கள், கடன்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் சிலர் இருப்பார்கள். சிலருக்கோ அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்திருந்தாலும் அந்த சொத்துக்களை எப்படி மீட்பது என்ற கேள்வியும் இருக்கும்.
இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்தால் அதை வைத்து சொத்துக்களை எளிமையாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஒருவர் உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அவரது சொத்தை பிரிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்போது இறந்தவருடைய சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஒருவேளை வாரிசுகளுக்குள் ஒற்றுமை இருந்தால் தங்களுக்குள் சொத்துகளைப் பிரித்துக் கொண்டு எளிமையாக பிரச்னையை முடித்துக்கொள்ளலாம்.
அதேபோல் ஒருவர் உயில் (Will) மற்றும் நாமினி (Nominee) எதுவும் எழுதாத பட்சத்தில் இறந்துவிட்டால் அவர் வங்கியில் வைத்திருக்கும் வைப்புத் தொகையை (FD) பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. இது அந்த கணக்கில் வாரிசுதாரர் நியமிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை பொறுத்து மாறுபடும்.
வாரிசுதாரர் (Nominee) நியமிக்கப்பட்டிருந்தால்:
இது மிகவும் எளிமையான முறை. இறந்தவர் கணக்கை ஆரம்பிக்கும்போதே ஒருவரை வாரிசுதாரராக நியமித்திருந்தால், அந்த நபர் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தைப் பெறலாம்.
*இறப்புச் சான்றிதழ் (death certificate) அசல் மற்றும் நகல்
*வாரிசுதாரரின் அடையாளச் சான்றான ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம்
*வாரிசுதாரர் கோரிக்கை படிவம் (Claim Form)
*ஒரிஜினல் டெபாசிட் ரசீது (FD)
2) வாரிசுதாரர் நியமிக்கப்படவில்லை என்றால் (Legal Heirs):
உயில் இல்லை, வாரிசுதாரரும் இல்லை என்றால், சட்டபூர்வ வாரிசுகள் அனைவரும் சேர்ந்து உரிமை கோர வேண்டும். இதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள்:
*வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate):
இதுவே முதன்மையான ஆவணம். தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இதைப் பெறலாம்.
*இறப்புச் சான்றிதழ்:
மாநகராட்சி அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட அசல் இறப்புச் சான்றிதழ்.
*வங்கி நடைமுறை:
வங்கிக்கு சென்று இறந்தவர் கணக்கு வைத்துள்ள கிளையில் 'உரிமைகோரல் படிவத்தை' (Claim Form) பூர்த்தி செய்து இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
*வாரிசு உரிமை பத்திரம் (Succession Certificate):
வாரிசு சான்றிதழ் சமர்ப்பித்த பிறகும் வங்கி நிர்வாகம் நீதிமன்றம் மூலம் பெறப்படும் Succession Certificateஐ கேட்கலாம். குறிப்பாக பெரிய தொகை என்றால் இந்த சர்டிபிகேட் கேட்கப்படும்.
*தடையில்லா சான்றிதழ் (NOC):
அனைத்து வாரிசுகளும் தங்களுக்கு பணத்தில் உரிமை இல்லை என்று கூறி பிரமாண பத்திரம் (Affidavit) தாக்கல் செய்யவேண்டும். அதாவது இந்தத் தொகையை குறிப்பிட்ட நபர் பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு தடை எதுவும் இல்லை என்று எழுதிக்கொடுக்க வேண்டும்.
கூட்டு கணக்கு:
கணக்கில் Either or Survivor முறை இருந்தால் உயில் இல்லாவிட்டாலும் மற்றொருவர் எளிதாக பணத்தை எடுக்க முடியும். ஆனால் வாரிசு சான்றிதழ் தேவைப்படும். வாரிசு சான்றிதழ் இல்லாமல் வங்கியால் பணத்தை வழங்க முடியாது என்பதால் முதலில் வாரிசு சான்றிதழ் பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்.