

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை முதல் அனைத்து பெரிய கடைகளிலும் யுபிஐ வசதி வந்து விட்டது. இதுதவிர பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் கட்டணங்களுக்கு கூட ஆன்லைனில் பணம் செலுத்த முடியும். அதேநேரம் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மோசடிகளுக்கும் பஞ்சமில்லை.
இந்நிலையில் பொதுமக்களின் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை கண்காணிக்குமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுகிறது. இதுகுறித்த சில தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மை நிலை என்ன? யாரையெல்லாம் வருமான வரித் துறை கண்காணிக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கணக்கில் வராத கருப்புப் பணத்தை கண்டறியவும், பினாமி சொத்துக்களின் பரிவர்த்தனைகளைத் தடுக்கவும் வருமான வரி புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணையை செய்வதற்கும் வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளது. சட்டப்படி பணப் பரிவர்த்தனைகளை செய்து வரும் நேர்மையான குடிமக்கள், வருமான வரித் துறையைக் கண்டு எப்போதும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகமாகி விட்ட இன்றைய சூழலில், வருமான வரித் துறை தனிநபர்களின் பரிவர்த்தனையை கண்காணிக்கிறது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையான தகவல் இல்லை என்பதே நிதர்சனம்.
பொதுமக்களின் தினசரி தேவைகளுக்கான அன்றாட பரிவரித்தனைகளை வருமான வரித் துறை கண்காணிப்பதில்லை. திடீரென அதிக அளவிலான பணம், பரிமாற்றம் செய்யப்படும் போது அந்தத் தகவல் வருமான வரித் துறையின் கவனத்திற்கு சென்று விடும்.
மற்றபடி மளிகை கடை, டீக்கடை, டிக்கெட் கடடணங்கள் மற்றும் ஷாப்பிங் உள்ளிட்டத் தேவைகளுக்கு தனிநபர்கள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, அதனை வருமான வரித் துறை கண்காணிப்பது இல்லை. அன்றாட செலவுகளை கண்காணிக்க, வருமான வரித் துறைக்கு எந்த அவசியமும் இல்லை என்பதே உண்மை.
மேலும் தனிநபர்களின் சமூக ஊடக கணக்குகள், இ-மெயில், யுபிஐ மற்றும் டிரேடிங் உள்ளிட்டவற்றில் வருமான வரித் துறையால் உள்நுழைய முடியாது.
வருமான வரியை சரியாக கட்டாமல் இருப்பவர்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்பவர்களை மட்டுமே வருமான வரித் துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
வருமான வரித் துறை யாரை கண்காணிக்கும்:
சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்புத் தொகை ஆண்டிற்கு ரூ.10 லட்சத்தை தாண்டினால், அது வருமான வரித் துறையின் கவனத்திற்கு செல்லும்.
அதேபோல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரொக்கமாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்தாலும் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். இருப்பினும் பணத்திற்கான தகுந்த ஆதாரங்கள் இருந்தால் பிரச்னையே வராது.
ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றில் ரொக்கமாக பணம் கைமாறும் போது, அதற்கான தகுந்த ஆதாரங்களை வைத்திருப்பது நல்லது. நகரங்களைப் பொறுத்தவரை ரியல் எஸ்டேட் துறையில் ரூ.30 லட்சம் வரை ரொக்கமாக பணப் பரிமாற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லையெனில் வருமான வரித் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.