

FD vs Mutual Fund: இன்றைய தலைமுறையினர் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது குறித்த விழிப்புணர்வு மிக அதிக அளவில் பெருகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் தனது வாழ்நாளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு பெரிய கனவு நிச்சயம் இருக்கும். உங்களிடம் தற்போது இருபத்தைந்து லட்சம் ரூபாய் மொத்தமாக இருந்தால், அதனை ஒரு கோடியாக மாற்ற எதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மற்றும் சிறந்தது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
குறிப்பாக நிலையான வைப்பு நிதி (Fixed Deposit) மற்றும் பரஸ்பர நிதிகள் (Mutual Funds) ஆகிய இரண்டில் எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதையும், அந்த மாபெரும் இலக்கை அடைய எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பதையும் ஒரு தெளிவான கணக்கீட்டுடன் இங்கு அலசலாம்.
பாதுகாப்பான நிலையான வைப்பு நிதி (Fixed Deposit)!
பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களின் முதல் தேர்வாக எப்போதுமே வங்கிகள் வழங்கும் நிலையான வைப்பு நிதி தான் முன்னணியில் இருக்கிறது. இதில் உங்களின் முதலீட்டிற்கு எந்தவிதமான பங்குச்சந்தை அபாயங்களும் கிடையாது. உங்களின் கஷ்டப்பட்ட பணம் மிக பாதுகாப்பாக இருக்கும். பொதுவாக எஃப்டி (FD) திட்டங்களில் ஆண்டுக்கு ஆறு முதல் ஏழு சதவிகிதம் வரை லாப வட்டி வழங்கப்படுகிறது.
நீங்கள் உங்களிடம் உள்ள 25 ரூபாயை ஏழு சதவிகித வட்டி தரும் ஒரு எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்தால், அது ஒரு கோடி ரூபாயாக மாற சுமார் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வட்டியாக மட்டும் 78 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது மிகவும் பாதுகாப்பான முதலீடு என்றாலும், இதில் பணவீக்கம் காரணமாக உங்களின் லாபத்தின் உண்மையான மதிப்பு பிற்காலத்தில் குறைய அதிக வாய்ப்புள்ளது.
வேகமாக வளரும் பரஸ்பர நிதிகள் (Mutual Funds)!
சந்தையின் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும் அளவிற்கான துணிச்சல் உங்களுக்கு இருந்தால் பரஸ்பர நிதிகள் ஒரு அற்புதமான தேர்வாக அமையும். உங்களைப் போன்ற பல முதலீட்டாளர்களின் பணத்தை ஒன்றாகச் சேர்த்து, சிறந்த அனுபவம் வாய்ந்த நிதி மேலாளர்கள் மூலம் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். இதில் சராசரியாக 12-15 சதவிகிதம் வரை அதிரடியான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் அதே 25 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, உங்களுக்கு 12% லாபம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களின் பணம் வெறும் 13 ஆண்டுகளில் ஒரு கோடியே ஒன்பது லட்சமாக பிரம்மாண்டமாக வளர்ந்துவிடும். ஒருவேளை 14 சதவிகித லாபம் கிடைத்தால், வெறும் 11 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என்ற உங்களின் கனவு இலக்கை நீங்கள் மிக எளிதாக அடைந்துவிடலாம்.
இந்த இரண்டில் எந்த முதலீடு உங்களுக்கு செட் ஆகும் என்பது உங்களின் தனிப்பட்ட நிதி இலக்குகள் மற்றும் அபாயங்களை ஏற்கும் திறனைப் பொறுத்தது. உங்களுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமான வருமானமும் மட்டுமே மிக முக்கியம் என்று நினைத்தால் நீங்கள் வங்கியின் FD திட்டங்களை நாடலாம். ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி மிக அதிக லாபம் ஈட்ட விரும்பினால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே உங்களுக்கு மிகச் சரியான பாதையாகும்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கான ஒரு வழிகாட்டுதலுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. முதலீடு செய்வதற்கு முன்பாக துறை சார்ந்த நிதி நிபுணர்களிடம் உங்களின் தனிப்பட்ட சந்தேகங்களைக் கேட்டு ஆலோசனை பெறுவது எப்போதுமே உங்களின் பணத்திற்கு பாதுகாப்பானது.