
தங்கம் என்பது எப்போதும் மிகச் சிறந்த சேமிப்பாக கருதப்படுகிறது. ஒரு நாட்டின் தங்கக் கையிருப்பு தான்அந்த நாட்டின் பொருளாதார வலிமைக்கு சான்றாக உள்ளது. இந்தியாவின் அதிக தங்கக் கையிருப்பு ,பொருளாதாரத்தில் உயர ஆதரவாக இருக்கிறது. கடன் வாங்க பாரம்பரிய அடமானப் பொருளாக தங்கம் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
முன்பெல்லாம் மக்கள் ஏதேனும் ஒரு மார்வாடி கடையில் அடகு வைப்பார்கள் , இப்போதெல்லாம் அந்த நிலை மாறி விட்டது. தங்கத்தை அடமானம் பிடிக்கவே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தைக்கு வந்து விட்டன. ஆயினும் வங்கிகளில் நகையை அடகு வைப்பது தான் சிறந்ததாக கருதப்படுகிறது. தங்க நகைகளை அடகு வைக்கும் வழிமுறைகளும் , அதன் சாதக பாதக அம்சங்களையும் ஆராயலாம்.
மிகக் குறைந்த வட்டி:
குறைந்த வட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது முதலில் அரசு வங்கி தான். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. "அடுத்த ஆட்சி வரும் போது நகைக் கடனை தள்ளுபடி பன்னிடுவாங்க" என்ற நினைப்பு தான் , அரசு வங்கிகளில் மைல் நீள வரிசை நிற்கக் காரணம். இப்படி கல்விக்கடன் தள்ளுபடி ஆகும் என்று நினைத்து கட்டாமல் விட்டு தான் பலரும் சிபிலில் குத்து வாங்கி இருக்கிறார்கள். இன்று அவர்களுக்கு தனிநபர் கடன் கிடைப்பது இல்லை. தங்க நகைகளை அடமானம் வைத்தால் மாதா மாதம் வட்டி கட்டுவது உங்களது, சிபிலுக்கு நல்லது.
நகைகளை அடமானம் வைக்கும் போது அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர்கள் பெயரில் வைக்காமல் , வீட்டில் இருப்பவர்கள் பெயரில் வைக்கலாம். ஏனெனில் தங்க நகைக்கடன் ஒருவரது பெயரில் அதிகமாக இருந்தால் , அது அவருக்கு தனி நபர் கடன் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
உதாரணத்திற்கு ₹50,000 மாத சம்பளம் பெறும் நபர் ₹5 லட்ச ரூபாய்க்கு தங்க நகைக் கடன் பெற்றிருந்தால் , அது அவரது ஆப்ளிகேஷனில் சேர்க்கப்படும். அதனால் ₹20,000 மாதம் தவணை கட்டுவதாக கணக்கில் எடுத்துக் கொண்டு, மீதமுள்ள சம்பளத்திற்கு தான் தனிநபர் கடன் வாங்க முடியும். அதனால் , அதிக தங்க நகைக்கடனை சம்பளம் பெறும் நபர் பெயரில் அதிகம் வைக்க வேண்டாம்.
அரசு வங்கிகள் எப்போதும் குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்குகிறது. குறைந்த பட்சம் விவசாயிகளுக்கு 4% ஆண்டு வட்டியிலும் மற்றவர்களுக்கு 8% ஆண்டு வட்டியிலும் நகைக்க டன்களை வழங்குகின்றன. பெரும்பாலும் ஒரு வருட கெடுவிற்குள் இந்த நகைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். இறுதி கெடு நாளிற்கு முன்னதாக நகையை மீட்பது அல்லது அங்கேயே மறு அடகு வைப்பது போன்ற செயல்முறைகளை பின்பற்றுங்கள்.
தனியார் வங்கிகள் பெரும்பாலும் ஆண்டுக்கு 12% இருந்து 18% வரை வட்டியில் நகைக் கடன்களை வழங்குகின்றது. அரசு அல்லது தனியார் வங்கி எதுவாக இருந்தாலும் , செயல்முறைக் கட்டணம் , பேக்கிங் கட்டணம் , நகை மதீப்பீட்டாளர் கட்டணம் ஆகியவை இருக்கும். இதே மாதிரி செயல்பாடுகள் தான் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமும் இருக்கும் . ஆனால், இந்த நிறுவனங்கள் வட்டி சற்று அதிகமாக இருக்கும். இவர்கள் 14% லிருந்து 20% வரை ஆண்டு வட்டிக்கு நகைக் கடன் வழங்குகிறார்கள்.
கார்ப்பரேட் நகைக்கடன் நிறுவனங்கள்:
கார்ப்பரேட் நகைக்கடன் நிறுவனங்கள் விரைவாக சில நிமிடங்களில் தங்க நகைக் கடன்களை வழங்கி விடுகிறார்கள். மிகவும் அவசரத் தேவைக்கு உடனடியாக பணம் பெற சிறந்ததாக இது இருக்கும். ஆனால் , நீண்ட காலம் இங்கு தங்கம் அடமானம் வைப்பது அதிக இழப்பை ஏற்படுத்தும். முதல் சில மாதங்கள் இங்கு 12% முதல் 24% வரை இருக்கும் ஆண்டு வட்டி விகிதங்கள் , மூன்று மாதங்களுக்கு பின்னர் அதிகமாகும் , வட்டி கட்டாமல் விட்டால் வட்டிக்கு வட்டி , அது போடும் குட்டி என அந்த நகைகளை மீட்க முடியாமல் போய் விடும்.
இறுதியாக நகையை அடமானம் வைக்க சிறந்தது அரசு வங்கிகள் தான். அங்கு உங்களது நகைக்கடன் அளவை தாண்டி விட்டால், தனியார் வங்கிகள் சிறந்ததாக இருக்கும். பொதுவாக அரசு வங்கிகளில் ஒரு சில வங்கிகளை தவிர மற்ற வங்கிகளில் கூட்டம் இருக்காது , அது போல நகர்புறத்திற்கு வெளியே உள்ள தனியார் வங்கிகளிலும் கூட்டம் குறைவாக தான் இருக்கும்.இது போன்ற வங்கிகளுக்கு சென்றால் நகைக் கடன் விரைவாக கிடைக்கும். அவரச தேவைகளுக்கு உள்ளூர் அடகு கடைகளில் பேரம் பேசி குறைத்து வைக்கலாம். அவர்களிடம் மறைமுகக் கட்டணம் ஏதும் இருக்காது , வட்டிகளில் சமரசம் செய்து கொள்வார்கள்.