மருத்துவக் காப்பீடு: இந்த 5 தவறுகளை மட்டும் செய்யவே கூடாது!

Health Insurance
Health Insurance
Published on

நமக்கு எப்போது உடம்பு சரியில்லாமல் போகும் அல்லது அடிபடும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி திடீரென்று மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தால், சில சமயங்களில் நிறையப் பணம் செலவாகும். அந்தச் சமயத்தில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், நல்ல சிகிச்சை பெற உதவுவதுதான் 'ஹெல்த் இன்சூரன்ஸ்' (Health Insurance) எனப்படும் மருத்துவக் காப்பீடு. ஆனால், பலர் இந்த இன்சூரன்ஸ் பாலிசி வாங்கிய பிறகும், மருத்துவமனையில் தங்கள் சொந்தப் பணத்தைக் கட்டும் நிலைமைக்கு ஆளாகிறார்கள். ஏன் தெரியுமா? பாலிசி எடுக்கும்போது அவர்கள் கவனிக்கத் தவறிய சில முக்கிய விஷயங்கள்தான் காரணம். அவை என்னவென்று பார்ப்போம்.

1. 'எல்லாமே கவர் ஆகும்' என்று நினைப்பது

நாம் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி வாங்கிவிட்டால், மருத்துவமனையில் ஆகும் ஊசி, மருந்து, ஆபரேஷன் என எல்லாச் செலவுகளையும் அந்த கம்பெனியே கொடுத்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஒவ்வொரு பாலிசியிலும், "நாங்கள் இந்த நோய்க்குப் பணம் தர மாட்டோம்", "இந்த ஆபரேஷனுக்குக் கிடையாது" என்று சில விதிகள் (Policy Exclusions) இருக்கும். பாலிசி வாங்கும்போதே அந்த விதிகளை நாம் தெளிவாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

2. 'காத்திருப்பு காலம்' பற்றித் தெரியாமல் இருப்பது

சிலருக்கு இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன்பிருந்தே சில நோய்கள் இருக்கலாம். இன்சூரன்ஸ் கம்பெனிகள், "நீங்கள் பாலிசி எடுத்தாலும், இந்த பழைய நோய்களுக்கு நாங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்துதான் பணம் தருவோம்" என்று ஒரு 'காத்திருப்பு காலம்' (Waiting Period) வைத்திருப்பார்கள். அந்த நேரத்திற்குள் அந்த பழைய நோய்க்காக மருத்துவமனைக்குச் சென்றால், செலவை இன்சூரன்ஸ் கம்பெனி தராது. இதை முன்பே தெரிந்துகொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
எதிர்காலத் தேவைக்கு தன் விருத்தி LIC பாலிசி: சிறப்பம்சங்கள் இதோ!
Health Insurance

3. எந்த மருத்துவமனை என்று பார்க்காதது

ஒவ்வொரு இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் என்று சில 'நெட்வொர்க்' மருத்துவமனைகள் (Network Hospitals) இருக்கும். அதாவது, இந்த மருத்துவமனைகளுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்திருப்பார்கள். அங்கே நாம் சிகிச்சை பெற்றால், நாம் கையிலிருந்து பணம் கட்டத் தேவையில்லை. இன்சூரன்ஸ் கம்பெனியே நேரடியாகப் பணத்தைக் கட்டிவிடும். அதை விட்டுவிட்டு, அந்தப் பட்டியலில் இல்லாத வேறு மருத்துவமனையில் சேர்ந்தால், நாம் முதலில் முழுப் பணத்தையும் கட்டிவிட்டு, பிறகு கம்பெனியிடம் விண்ணப்பித்துத் திரும்ப வாங்க வேண்டியிருக்கும்.

4. மருத்துவமனையில் சேர்ந்ததைச் சொல்ல மறப்பது

இது மிகவும் முக்கியமான விஷயம். அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் கூட, 24 மணி நேரத்திற்குள்ளாக "நாங்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளோம்" என்று இன்சூரன்ஸ் கம்பெனிக்கு போன் செய்தோ அல்லது இ-மெயில் மூலமோ தகவல் சொல்லிவிட வேண்டும். அப்படிச் சொல்லத் தவறினால், அவர்கள் "நீங்கள் விதிகளை மதிக்கவில்லை" என்று கூறி, பணத்தைத் தர மறுத்துவிட அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
மல்டி இயர் ஹெல்த் பாலிசி பற்றி தெரியுமா உங்களுக்கு?
Health Insurance

5. தேவையான கூடுதல் வசதிகளை (Add-ons) சேர்க்காதது

"குறைந்த விலையில் பாலிசி போதும்" என்று சிலர் சாதாரணமாக ஒன்றை வாங்குவார்கள். ஆனால் அதில் பெரிய நோய்களுக்குத் தேவையான முழு சிகிச்சையும் கிடைக்காது. உதாரணமாக, மருத்துவமனை அறை வாடகைக்குக் கட்டுப்பாடு இருக்கலாம். இதைத் தவிர்க்க 'ஆட்-ஆன்' (Add-on) எனப்படும் கூடுதல் வசதிகளைச் சேர்த்து வாங்குவது நல்லது. இது பெரிய செலவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

மேலே சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் கவனமாகப் பார்த்தால், அவசர காலத்தில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், நல்ல சிகிச்சையைப் பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com