

சிபில் ஸ்கோர் (CIBIL Score) அதாவது சிபில் மதிப்பெண் என்பது ஒருவர் கடன் கொடுப்பதற்கு தகுதியானவரா (Creditworthiness) என்பதை தெரிவிப்பது. இது வங்கிகளால் கடன் வழங்குவதற்கு முன்பு சரிபார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒருவர் வாங்கும் கடன் சம்பந்தமான பரிவர்த்தனை விபரங்களை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் தகவல் நிலையங்களுக்குத் (Credit Information Bureau) தெரிவித்து வருகின்றன. இத்தகைய கடன் தகவல் மையங்கள் நான்கு உள்ளன.
1) டிரான்ஸ் யூனியன் கடன் தகவல் செயலகம் (இந்தியா) நிறுவனம் (TransUnion Credit Information Bureau (India) Limited)
2) எக்ஸ்பீரியன்(Experian)
3) சிஆர்ஐஎஃப் ஹை மார்க் (CRIF High Mark)
4) ஈக்விஃபேக்ஸ் (Equifax)
இவற்றில் ட்ரான்ஸ் யூனியன் கணக்கிடும் சிபில் மதிப்பெண் பிரபலமானது.
ஏன் நல்ல சிபில் மதிப்பெண் கொண்டிருக்க வேண்டும்?
நல்ல சிபில் மதிப்பெண் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதற்கும், கடன் திருப்பி செலுத்துவது சம்பந்தமான பல்வேறு சலுகைகள் பெறுவதற்கும் உதவும். இந்த மதிப்பெண் மூன்று இலக்க எண். இது 300 முதல் 900 வரை இருக்கலாம். அதிக மதிப்பெண் என்பது கடன் திரும்பி செலுத்துவதில் வல்லவர் என்பதை தெரிவிக்கிறது.
எந்த சிபில் மதிப்பெண் நல்ல மதிப்பெண் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அது பின்வருமாறு;
300 முதல் 500 - மோசம்
500 முதல் 650 - சுமார்
650 முதல் 750 - நன்று
750 முதல் 799 - மிக நன்று
800 முதல் 900 - மிக மிக நன்று
சிபில் மதிப்பெண்ணை 3 மாதங்களுக்குள் 750 வரை உயர்த்துவது எப்படி?
சிபில் மதிப்பெண் 30 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் எவ்வாறு மூன்று மாதங்களுக்குள் சிபில் மதிப்பெண்ணை 750 க்கு உயர்த்த முடியும் என்பதைக் குறித்து ஐந்து விஷயங்களைப் பார்ப்போம்.
1) கடன் தவணைகளை மற்றும் கடன் அட்டை ரசீதுகளை நேரத்தில் செலுத்துவது - கடன் தவணைகளை ஒருநாள் தாமதமாக செலுத்தினாலும் கூட, சிபில் மதிப்பெண் அடி வாங்கிவிடும். எனவே, கடன் தவணைகளை, கடன் அட்டை ரசீதுகளை முன்கூட்டியே அல்லது கடைசி நாளிலாவது திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
2) வழங்கப்பட்ட கடனை விட மிகக் குறைவாக பயன்படுத்துவது (Credit Utilization Ratio(CUR)) - வழங்கப்பட்ட கடனில் குறைவான சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவது. 30% க்குள்ளாக கடனைப் பயன் படுத்துவது. உதாரணமாக, ஒருவருக்கு கடன் அட்டை வழங்கப்பட்ட தொகை 1 இலட்சம் எனில் 30 ஆயிரத்திற்குள்ளாக கடனட்டையைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் அவருக்கு கடன் குறைவாக தேவைப்படுகிறது என்ற எண்ணம் உண்டாகி, அவர் சிபில் மதிப்பெண் அதிகரிக்கும்.
3) ஒரு சமயத்தில் ஒரு கடனுக்கு மட்டும் விண்ணப்பிப்பது - குறுகிய காலத்தில் நிறைய கடன்களை விண்ணப்பிக்கும் போது ஒருவருக்கு அதிகமாக கடன் தேவைப்படுகிறது என்ற எண்ணம் உருவாகி சிபில் மதிப்பெண் அடி வாங்கும்.
வங்கிகள் சிபில் மதிப்பெண்ணை ஒருவருக்காக கடன் தகவல் நிலையத்தில் கோரும் பொழுது அது ஹார்டு என்கொயரி (Hard Enquiry) அல்லது கடினமான விசாரணை என்று கருதப்பட்டு சிபில் மதிப்பெண் அடிவாங்கும். ஒரு சமயத்தில் ஒரு கடன் மட்டும் விண்ணப்பித்து, அதைக் கட்டி முடித்த பிறகு, அடுத்த கடனை வாங்க வேண்டும். பல கடன்களை வைத்திருக்காமல், அவற்றை கட்டி முடித்துவிட்டு ஒரே ஒரு கடனை மட்டுமே வைத்திருப்பது போன்றவை சிபில் மதிப்பெண்ணை அதிகரிக்க உதவும்.
4) கடன்களின் கலவை வைத்திருப்பது (Credit Mix) - வீடு, வாகனம் போன்றவை சார்ந்த அடமானக் கடன்கள், தனிநபர் கடன், கடனட்டைக் கடன் போன்ற அடமானம் அற்ற கடன்களின் கலவை வைத்திருந்தால், அவர் பல்வேறு விதமான கடன்களைக் கையாள்வதில் வல்லவர் என்று சிபில் மதிப்பெண் அதிகரிக்கும். முடிந்த அளவு அடமானம் உள்ள கடன்களை வைத்திருக்க வேண்டும். அதிகமாக அடமானமற்ற கடன்களை வைத்திருக்கும் போது, அவர் கடன்களை அதிகமாக நம்பி உள்ளார் என்று சிபில் மதிப்பெண் அடி வாங்கும்.
5) பழைய கடன் கணக்குகளை மூடாமல் வைத்திருத்தல் (Credit History) - ஆரம்ப நாட்களில் தொடங்கப்பட்ட கடன் அட்டைகளை தொடரும் பட்சத்தில், இவர் நீண்ட காலம் கடன்களை பற்றிய வரலாறு கொண்டவர் என்று சிபில் மதிப்பெண் அதிகரிக்கும்.
மேலும், கடன் தகவல் அறிக்கையை(Credit Report) சரிபார்த்து தவறுகளைச் சரி செய்யவேண்டும். கடந்த காலத்தில் கடன்களை சரியாக கட்டியிருந்தால் கூட சிபில் இணையதளத்தில் கடன் சார்ந்த தகவல் அறிக்கையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனைக் குறித்த புகாரினை சிபில் நிறுவனத்தில் அளிப்பதன் மூலம், அவை சரிசெய்யப்பட்டு சிபில் மதிப்பெண் அதிகரிக்கும்.
மேலே குறிப்பிட்ட 5 முறைகளை கடை பிடிப்பதன் மூலம், 3 மாதங்களுக்குள் சிபில் மதிப்பெண்ணை 750 வரை உயர வைக்க முடியும். நல்ல நிதி சம்பந்தமான பழக்கங்கள் மூலம், இன்னும் 900 ஐ நோக்கி உயர்த்த முடியும்.
இந்த நடைமுறை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கடன் தகுதியை உடனடியாக அதிகரித்து, வங்கிகளில் எளிதாகவும் குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் அல்லது கிரெடிட் கார்டு ஒப்புதலைப் பெற முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: