

இந்த உலகில் எல்லோருமே பணக்காரராக வாழ்வது எப்படி என்று தலையை பிய்த்துக் கொண்டு இரவு பகலாக தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் கடனில்லாமல் வாழ்வது எப்படி என்பதற்கு ஐடியா தருகிறீர்களே என நீங்கள் யோசிப்பது புரிகிறது.
ஒருவர் எந்த அளவிற்கு பணக்காரராக இருக்கிறாரோ அந்த அளவிற்கு அவருக்குக் கடன் இருக்கும் என்பது பலரும் அறியாத விஷயம். இந்த விஷயத்தில் சில பணக்காரர்கள் விதிவிலக்காக இருக்கலாம்.
ஒருவர் ஒரு பைசா கூட கடன் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவரும் ஒரு பணக்காரரே என்பதே நிதர்சனம். சரி விஷயத்திற்கு வருவோம்.
சேமிப்பு என்பது என்ன?
ஒரு மாதத்தில் உங்கள் எல்லா செலவுகளும் போக உங்கள் வருமானத்தில் மீதம் உங்கள் கையில் இருக்கும் தொகையே சேமிப்பு.
கடன் என்பது என்ன?
ஒரு மாதத்தில் உங்கள் வழக்கமான மாத செலவிற்கு உங்கள் வருமானம் போதாமல் தேவைப்படும் பணத்தை ஏதாவது ஒரு முறையான வழியில் பெறும் தொகையே கடன்.
கடன் என்பது வாழ்வின் நிம்மதியை வேறோடு அறுக்க வந்த ஒரு அரக்கன் என்பது அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களுக்கே தெரியும். கடன் வாங்கினால் அதை அடைக்கும் வரை தூக்கம் வராது. தூக்கம் போனால் நிம்மதியும் போய்விட்டது என்பது அர்த்தம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான செலவு, அவசியமில்லாத செலவு, ஆடம்பர செலவு என மூன்று வகையான செலவினங்கள் உள்ளன.
உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் அவசியமான செலவுகள். வாராவாரம் ஓட்டல்களுக்குச் செல்வது, சினிமாவிற்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது, அடிக்கடி நன்றாக இயங்கும் மொபைல் போனை மாற்றி புதிய மாடல் மொபைல் போனை வாங்குவது என பலவும் அவசியமில்லாத செலவுகள். ஒரு கார் இருக்கையில் இரண்டாவது கார் வாங்குவது, மூன்றாவது மோட்டார் சைக்கிள் வாங்குவது, விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவது என்பது ஆடம்பர செலவு.
அவசியமானவற்றிற்கு செலவு செய்து வாழ்பவர்கள் புத்திசாலிகள். நிம்மதி அவர்களின் கைகோர்த்து நடக்கும். அவர்கள் வாழ்க்கையும் அமைதியாக ஏறுமுகத்தில் செல்லும். விரைவில் அவர்கள் பணக்காரராக ஆகவும் கூடும். எவ்வளவு பெரிய பணக்காரராய் இருந்தாலும் அவசியமில்லாத மற்றும் ஆடம்பரச் செலவுகளைச் செய்யத் தொடங்கினால் இருக்கும் பணம் மொத்தமும் கரைந்து மிகவும் சிரமப்படக் கூடிய நிலையை அடைய நேரிடும்.
வரவிற்குத் தகுந்த செலவு என்ற தாரக மந்திரத்தை நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்கப் பழக வேண்டும். எந்த ஒரு பொருளையும் தேவையின்றி வாங்கக்கூடாது. ஆடம்பர வாழ்க்கை நிலையில்லாதது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நமது வருமானம் சொற்ப அளவில் இருந்தால் கூட அதை சிறுசேமிப்பின் மூலம் மாதாமாதம் கணிசமாகப் பெருக்க முடியும்.
மாதாமாதம் நீங்கள் சம்பாதிக்கும் தொகையில் தயவுதாட்சண்யம் இன்றி இருபது சதவிகிதத்தை முதல் வேலையாக சேமிக்கப் பழக வேண்டும். மீதமுள்ள எண்பது சதவிகிதப் பணத்தை அந்த மாதத்திற்கு திட்டமிட்டு பார்த்து பார்த்து செலவு செய்யப் பழக வேண்டும்.
உங்களிடம் யாராவது உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறத ? என்று கேட்கும் போது எனக்கு கடனே இல்லை என்று பதில் கூறிப் பாருங்கள். உங்களை அவர் ஒரு வியப்பான பார்வை பார்ப்பதை உணரலாம்.
'நான் ஒரு பணக்காரன்' என்று ஒருவர் சொன்னால்கூட வியக்காதவர்.. 'எனக்கு கடனே இல்லை' என்று ஒருவர் சொல்லும் போது அவரைப் பார்த்து நிச்சயம் வியப்பார். இது ஒரு ஆச்சரியமான உண்மை. கடனில்லாத வாழ்க்கை சிறப்பானது. நிம்மதி தருவது. இன்று முதல் இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு எளிமையாக பார்த்து பார்த்து செலவு செய்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.