

பிஎஃப் தொகை என்பது நம் சம்பளத்தின் ஒரு பகுதியாகும். இதை நாம் வேலை செய்யும் இடத்தின் முதலாளி ஒவ்வொரு மாதமும் நம் சார்பாக பிடித்தம் செய்வார். ராஜினாமா அல்லது ஓய்வுக்குப் பிறகு, அதற்கேற்ப பிஎஃப் தொகையை நாம் பெறமுடியும்.
வேலை இழந்த பின் பிஎஃப் பணம் முழுமையாகப் பெற தகுதிகள் என்ன?
EPFO இணையதளத்தில் உள்ள 'கூட்டு கோரிக்கை' (Composite Claim) படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் இந்த பிஎஃப் தொகையை நாம் திரும்பப் பெறலாம். தனியார் துறை ஊழியர்களுக்கு பிஎஃப் திட்டம் என்பது பெரும் உதவியாக இருக்கிறது. தனியார் துறை ஊழியர்கள் அவ்வப்பொழுது தங்கள் வேலையை மாற்றும்பொழுது சிலர் தங்கள் பிஎஃப் தொகையை புதிய நிறுவனத்திற்கு மாற்றுகின்றனர்.
ஆனால் சிலரோ பணத்தை எடுத்து விடுகின்றனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தில் சேரும் ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறிய பிறகு தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க சில விதிமுறைகள் உள்ளன.
பொதுவாக ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தப் பணத்தை எடுக்கலாம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் விதிவிலக்குகள் உள்ளன. ஒரு ஊழியர் வெளிநாடு சென்றாலோ அல்லது திருமணத்திற்காக தனது வேலையை ராஜினாமா செய்தாலோ காத்திருப்பு காலம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது உடனடியாக பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
வேலையை விட்டு வெளியேறிய பிறகு பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான செயல்முறையை பார்க்கலாம்.
வேலையை ராஜினாமா செய்த பிறகு பிஎஃப்(PF) பணத்தை முழுமையாகத் திரும்பப்பெற உங்களது கடைசி வேலை நாளுக்குப் பிறகு 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
பிஎஃப் கணக்கில் இருந்து முழுத் தொகையையும் எடுக்க, EPFO உறுப்பினர் இணையதளத்தில் UAN எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து, உங்களது 'விலகல் தேதி' (Date of Exit) சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து 'Claim (Form 31, 19 & 10C)' மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அதாவது பிஎஃப் பணத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கு உங்களது கடைசி வேலைநாளுக்குப் பிறகு இரண்டு மாதங்கள் முடிந்திருக்க வேண்டும்.
உங்கள் முந்தைய நிறுவனம் அல்லது நீங்கள் பிஎஃப் போர்ட்டலில் உங்களது வேலையை விட்ட தேதியை (date of exit) முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணத்தை ஆன்லைனில் திரும்பப்பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
*உங்களது UAN (Universal Account Number) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி EPFO உறுப்பினர் இணையதளத்தில் நுழையவும்.
*உங்களது ஆதார், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவை UAN உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
*'Online Services' மெனுவில் உள்ள 'Claim (Form 31, 19 & 10C)' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
*பிஎஃப் இறுதி தீர்வுக்காக 'Form-19' மற்றும் பென்ஷன் தொகைக்காக 'Form -10C'ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
*உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ (OTP) உள்ளிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
*உங்கள் விண்ணப்பம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு அனுப்பப்படும். அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும் 15 முதல் 20 வேலை நாட்களுக்குள் பிஃஎப் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
பணம் வரவு வைக்கப்பட, உங்கள் பெயரில் உள்ள செயலில் உள்ள வங்கிக் கணக்கின் காசோலை அல்லது பாஸ்புக் நகலை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
5 ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை செய்து பிஎஃப் பிடித்தம் செய்திருந்தால் வரிப் பிடித்தம் இருக்காது. 5 ஆண்டுகளுக்குள் எடுத்தால் TDS கழிக்கப்படலாம்.
புதிய வேலையில் சேர்ந்தால், பிஎஃப் பணத்தை எடுக்காமல் புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்வது வரி இழப்பை தவிர்க்க உதவும்.
இந்த எளிய ஆன்லைன் வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் வேலையை விட்டு வெளியேறிய 2 மாதங்களில் எவ்வித அலைச்சலும் இன்றி உங்கள் முழு பிஎஃப் தொகையையும் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் 15 நாட்களுக்குள் பெற்று, உங்களின் அவசர நிதித் தேவைகளை எவ்வித தடையுமின்றி உடனடியாகப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: