

கடன் வரும் முன் காத்துக்கொள்ள உதவும் அவசர கால நிதியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?
எதிர்பாராத செலவுகளுக்குக் கடன் வாங்காமல் வரும் முன் காத்துக் கொள்வதற்கு காப்பீடு அவசியம். அந்தக் காப்பீடுகளை நாம் நான்கு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.
1) அவசர கால காப்பீடு அல்லது அவசர கால நிதி
2) ஆயுள் காப்பீடு
3) மருத்துவக் காப்பீடு
4) வீட்டுக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற இதர காப்பீடுகள்
அவசர கால காப்பீடு அல்லது அவசர கால நிதி என்பது முதன் முதலில் செய்ய வேண்டியது. அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
அவசரகால நிதி என்றால் என்ன? ஏன் வைத்திருக்க வேண்டும்?
அவசரகால நிதி என்பது நமக்கு அவசர காலத்தில் கடன் வாங்காமல் சமாளிக்க உதவும். இதனை ஆங்கிலத்தில் Emergency fund என்று கூறுவர். அவசரகாலத் தேவைகளுக்கு உதாரணங்கள்- திடீரென வீட்டின் சம்பாதிக்கும் நபர் நோய்வாய்ப்படுதல், திடீரென வீட்டின் சம்பாதிக்கும் நபர் வேலை இழத்தல், தீடீரென வீட்டின் கூரையில் நீர்க் கசிவு ஏற்படுதல், திடீரென வாகனம் பழுதாகுதல். இதில், திடீரென என்ற வார்த்தையைக் கவனிக்கவேண்டும்.
இது திடீரென வந்த செலவு. அதாவது எதிர்பாராத செலவு. இத்தகைய அவசரகால செலவுகளை, யாரையும் கையேந்தாமல், கடன் பட்டு விடாமல், முதலீடுகளில் கை வைக்காமல், சமாளிக்க நமக்கு உதவுவது அவசர கால நிதி.
அவசர கால நிதி எப்போது தொடங்கவேண்டும்? எவ்வளவு வைத்திருக்க வேண்டும் ?
வேலைக்கு வந்த உடனேயே அவசர கால நிதியைத் தொடங்கிவிட வேண்டும்.
அவசர கால நிதி என்பது குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் என்று தொடங்கி, படிப்படியாக அதிகரித்து ஒரு மாதத்தின் செலவைப்போல் குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும். 12 மாதங்கள் வைத்துக்கொண்டால் இன்னும் நலம். அதிகமாக வைத்திருக்க வைத்திருக்க அதிக காலம் கடன் வாங்காமல் எளிதாக கையாள முடியும். இவ்வாறு படிப்படியாக அவசரகால நிதியைத் தயார் செய்ய நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் போடுவது அவசியம்.
அவசர கால நிதியை எங்கு வைத்திருக்க வேண்டும் ?
அவசரகால நிதி என்பது காப்பீடு போன்றது. அது முதலீடு அல்ல. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. காப்பீட்டின் குறிக்கோள் ஏற்கனவே உள்ள நிதியைக் காப்பது. முதலீட்டின் குறிக்கோள் ஏற்கனவே உள்ள நிதியைப் பெருக்குவது. அவசரகால நிதி அவசர காலங்களில் கடன் வாங்காமல் காக்க உதவுவது. எனவே, அதற்கு நீர்ப்புத்தன்மை முக்கியம். அதனை வங்கியின் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அவசர காலங்களில் அருகில் உள்ள தானியங்கி பணப்பொறிக்குச் சென்று எடுக்குமாறு இருக்க வேண்டும். ஏதேனும் முதலீட்டில் இந்தப் பணம் இருந்தால், உடனே பணமாக மாற்றுவது கடினம். அவசர காலத்தில் கடன் வாங்க நேரலாம். மேலும், முதலீடுகளில் தவறான சமயத்தில் வெளியேறினால் பணத்தை இழக்க நேரிடும். எனவே, அவசர கால நிதியின் நீர்ப்புத்தன்மைக்கு வங்கியின் சேமிப்புக் கணக்கு தான், சிறப்பான இடம்.
அவசரகால நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு மறுசீரமைக்க வேண்டும் ?
அவசரகால நிதி என்பது எதிர்பாராத அவசர செலவுகளுக்கு மட்டுமே. மற்ற செலவுகளுக்குப் பணத்தைச் சேமித்து பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வருடாந்திர சுற்றுலா செல்வது, மின் உபகரணங்கள் வாங்குவது போன்றவை. ஒரு செலவுக்கு அவசர கால நிதியைப் பயன்படுத்த எண்ணினால், நாம் பின்வரும் மூன்று கேள்விகளைக் கேட்கவேண்டும்.
1) இது அவசரமா ?
2) இது அவசியமா ?
3) இது எதிர்பாராததா ?
இந்த மூன்றிற்கும் ஆம் என்ற பதில் வந்தால், அது அவசர செலவு. அதற்கு அவசரகால நிதியைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, திடீரென வாகனம் பழுதாவது.
அவசரகாலத்தில் பயன்படுத்தினால் உடனே மறுபடியும் பழைய நிலைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரவேண்டும். அதற்கு மாதா மாதம் பட்ஜெட்டில்(நிதி திட்டமிடலில்) நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் அடுத்த அவசர காலத்தை நாம் கடன் இன்றி சமாளிக்க முடியும்.
அவசர கால நிதி என்ற அருமையான விஷயத்தைப் பயன்படுத்திக்கொண்டு கடன் வரும் முன் காத்துக் கொள்வோம்.