

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) என்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் நிதியுதவித் திட்டமாகும். இது 1995 இல் தொடங்கப்பட்ட தேசிய சமூக உதவித்திட்டத்தின் (NSAP) கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் 60-79 வயதுடையவர்களுக்கு மாதம் ரூபாய் 200 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மாநில அரசின் கூடுதல் பங்களிப்புடன் சேர்த்து மொத்தம் மாதம் 1000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 41, மூத்த குடிமக்கள், வேலையில்லாதவர்கள், ஊனமுற்றோர் போன்றவர் களுக்கு ஆதரவை வழங்க மாநிலத்தை வழி நடத்துகிறது. அத்தகைய ஒரு முயற்சியாக இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளது.
இது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள முதியோருக்கு சமூக உதவி வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 2007 முதல் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் (Indira Gandhi National Old Age Pension Scheme) விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவராகவும், குறைந்தபட்சம் 60 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர் வேறு எந்த முதியோர் ஓய்வூதிய திட்டத்திலும் நிதி உதவி பெறாதவராகவும் இருக்க வேண்டும். தகுதியானநபர்கள் தங்கள் உள்ளூர் ஊராட்சி, நகராட்சி அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் அல்லது UMANG app மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெரும்பாலும் NSAP இணையதளத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஓய்வூதியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, வயது சான்றிதழ், முகவரி சான்று, வறுமைக் கோட்டிற்கு கீழ் BPL உள்ளதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம். குறிப்பாக விண்ணப்பதாரர் வேறு எந்த மூலத்திலிருந்தும் ஓய்வூதியம் அல்லது நிதி உதவியைப் பெறவில்லை என்று நிர்வாக அல்லது நீதித்துறை மாஜிஸ்திரேட்டால் முறையாக சான்றளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம்.
இத்திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறையை ஆன்லைனில் (ப்ளே ஸ்டோரிலிருந்து உமாங் செயலியை பதிவிறக்குவதன் மூலம்) அல்லது ஆஃப்லைனில் செய்யலாம்.
இந்தத் திட்டம் முதியோர்களுக்கு அடிப்படை நிதி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.