
கடந்த 22.7.2025ல் கல்கி ஆன்லைனில் வீடுகட்ட வங்கிக்கடன் வாங்கி மொரோட்டோாியம் சலுகையை பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது, அதை ஒரு தவணைகூட ஒத்திப்போடக்கூடாது, அது பொிய ஆபத்து என நம்பகமான தகவலை கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தாா். அவருக்கும், கல்கி குழுமத்திற்கும் நன்றி.
நான் எங்களது வீட்டில் மாடி போா்சன் கட்ட, பிரபல வங்கியின் துணை பைனான்ஸ் நிறுவனத்தில் ரூபாய் எட்டு லட்சம் கடன் வாங்கியிருந்தேன். மொத்தம் 7வருடங்கள் (84 தவணைகள்) பிரதிமாதம் ₹16,349 வீதம் 4ம் தேதி எனது கணவர் பென்சன் கணக்கிலிருந்து தொகை பிடித்தம் செய்யப்படும் என்ற நிபந்தனையில் கடன் வாங்கினோம். (2018 இறுதி ) கொரோனா உச்சமான நேரம் மத்திய அரசு மொராட்டோரியம் சலுகை அறிவித்தது.
அதன்படி மூன்று தவணை கழி்த்து பணம் வங்கியில் இருப்பு வையுங்கள் என குறுஞ்செய்தி மட்டுமே வந்தது. அதன்படி மாதாமாதம் தொகை பிடிக்கப்பட்டு வந்தது. 60 தவணை கட்டிவிட்டோம். பிறகு எனது கணவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே தவணை மாதங்களுக்குள்ளாகவே கடனை முடித்து விடலாம், அசல் வட்டி குறையும் என நினைத்து கடந்த 2024ல் ஆகஸ்டில் வங்கி கிளையை அனுகி கேட்டோம். அவர்கள் முன் தேதியிலேயே கடனை முடிப்பதாக இருந்தால் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் கட்டுங்கள் என கூறினாா். தொகை அதிகமாக சொல்கிறீா்களே விபரம் சரிவர கூறுங்கள் என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள் 3 தவணை மொரோட்டோாியம் அதற்கு வட்டி போடப்பட்டுள்ளது என கூறினாா்கள். இது தொடர்பாக வங்கியிலிருந்து எந்த தகவலும் கிடையாது. பிறகு அவர்களிடம் கடுமையாகப்பேச ரூபாய் 5,25,000 (ஐந்து லட்சத்து இருபத்தி ஐயாயிரம்) செலுத்தச் சொன்னாா்கள். அந்த நேரம் எனது கணவருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அந்த அவஸ்தையுடன் 15நாட்கள் அலைந்து எனது கணவரின் ஓய்வூதியத்தை வைத்து பென்சன் லோன் 4.86 லட்சம் வாங்கி (அதற்கு தவணைத்தொகை 36 மாதங்கள் மாதம் ₹16096 கட்டிவருகிறேன். இது ஓய்வூதியத்திலேயே பிடித்தம் செய்யப்படுகிறது.) மேற்கொண்டு பணம் ஏற்பாடு செய்து அவர்கள் கேட்ட தொகையை செலுத்தி கணக்கை முடித்து M O D யை ரத்து செய்ய எழுதிக்கொடுத்தோம்.
"அது ஒரு மாதகாலமாகும்" என்றார்கள். அதன் பிறகு, எனது கணவரைத் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்தோம். இதற்காக, சுமார் 7 லட்சம் ரூபாய் வரை செலவானது; நகைகளை அடகு வைத்து இந்தப் பணத்தைச் சமாளித்தோம். இருப்பினும், பணம் போதாததால், ஓமனில் வேலை செய்யும் எனது மைத்துனர் மகன் வட்டியின்றி ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார். "உங்களுக்குப் பணம் கிடைக்கும்போது திருப்பித் தாருங்கள்" என்று அவர் கூறினார்.
பல மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். இது மிகவும் ஆபத்தானது என்றும், சுமார் 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறினார்கள். எனவே, மாத்திரைகளைச் சாப்பிட்டு வரச் சொல்லி எங்களை அனுப்பிவிட்டார்கள். 20 லட்சம் ரூபாய் தேவை என்றால், வீட்டை விற்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
வேண்டாம் என்ற சூழலில் எனது கணவர் வாழ்ந்து வருகிறாா். புத்தமங்கலம் மணல்மேடு மாாி அம்மன் துணையோடு வாழ்ந்து வருகிறோம். மொராட்டோரியத்தால் ஏமாந்து போன அனுபவத்தை சொல்லும் நிலையில் எனது குடும்ப பாரத்தையும் இறக்கி விட்டேன்.
வீடு என்பது அத்தியாவசியத் தேவைதான். ஆனால், தனிநபர் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி, மொராட்டோரியம் (Moratorium) போன்ற சலுகைகளை நம்பி எங்களைப் போல யாரும் ஏமாற வேண்டாம். நாங்கள் ஏமாந்தது போதும்; மற்றவர்களும் வீட்டுக்கடன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இதை எழுதினேன்.