

இந்தியாவில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பான திட்டம்தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY). மத்திய அரசின் 2024-25 பட்ஜெட் அறிவிப்பின்படி, இத்திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்படும் வரம்பானது ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது.
இந்த ₹20 லட்சம் கடனை யார் பெறலாம்? அதன் நிபந்தனைகள் என்ன? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
முன்பு முத்ரா யோஜனாவில் மூன்று கடன் பிரிவுகள் மட்டுமே இருந்தன. தற்போது ₹20 லட்சம் வரம்பு உயர்வால் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அவை முறையே,
1. சிசு (Shishu): ₹50,000 வரையிலான சிறிய கடன்கள்.
2. கிஷோர் (Kishor): ₹50,001 முதல் ₹5 லட்சம் வரையிலான கடன்கள்.
3. தருண் (Tarun): ₹5,00,001 முதல் ₹10 லட்சம் வரையிலான கடன்கள்.
4. தருண் பிளஸ் (Tarun Plus): ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரையிலான புதிய கடன் பிரிவு.
கடன் பெறத் தேவையான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
அனைவருக்கும் நேரடியாக ₹20 லட்சம் கடன் கிடைத்துவிடாது. இதற்கு அரசு ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது.
ஏற்கனவே தருண் பிரிவின் கீழ் கடன் பெற்று, அதைச் சரியாகத் திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோர்கள் மட்டுமே இந்த ₹20 லட்சம் வரையிலான புதிய கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
உற்பத்தி, வர்த்தகம், சேவைத்துறை அல்லது விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் சிறு நிறுவனங்கள் இக்கடனைப் பெறலாம்.
18 வயது முதல் 65 வயது வரை உள்ள இந்தியக் குடிமக்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற எந்தவித சொத்துப் பிணையமும் தேவையில்லை.
வழங்கப்படும் கடனுக்கு, வங்கிகளின் விதிகளுக்கு உட்பட்டு சந்தை விலையை விடக் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த பொதுவாக 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
பணத் தேவைகளுக்காக டெபிட் கார்டு வசதியும் வழங்கப்படுகிறது. இந்தக் கார்டு முத்ரா கார்டு என அழைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று, வணிகம் அல்லாது தொழில் குறித்த திட்ட அறிக்கை, கடந்த 6 முதல் 12 மாத கால வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஏற்கனவே பெற்ற முத்ரா கடனைச் சரியாகச் செலுத்தியதற்கான ஆதாரங்கள் போன்றவை கடனை விண்ணப்பிக்க தேவையானவை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராமப்புற வங்கிகள் அல்லது சிறு நிதி வங்கிகளை அணுகலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் JanSamarth அல்லது Udyamimitra இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
வளர்ந்து வரும் சிறு தொழில்களுக்கு ஒரு இந்தத் திட்டம் வரப்பிரசாதமாகும். புதிய தொழில் தொடங்க விரும்பினாலோ அல்லது ஏற்கனவே முத்ரா கடனை முறையாகக் கையாண்டு உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவோ, இந்தத் திட்டம் உங்களுக்குச் சிறந்த வாய்ப்பாகும்.