
பிரதான் மந்திரி ஸ்ரக்ஷா பீமா யோஜனா என்பது மத்திய அரசால் வழங்கப்படும் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது ஊனத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு காப்பீட்டுத் திட்டம் ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ளிட்ட மக்களுக்கு மிகக் குறைந்த அளவு செலவில் கிடைக்கிறது.
PMSBY என்றால் என்ன?
PMSBY என்பது இந்திய அரசாங்கத்தால் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். 18 முதல் 70 வயதுக்குட்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எவரும், ஒரு சிறிய வருடாந்திர பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தில் எளிதாக சேரலாம். இந்தத் திட்டம் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக அதிக காப்பீட்டு பிரீமியங்களை வாங்க முடியாதவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
திட்டத்தின் பயன்கள்:
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு வருடத்திற்கு 20 ரூபாய் மட்டுமே பிரீமியம் கட்டினால் போதும். இது ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே கழிக்கப்பட்டு விடும். காப்பீடு செய்த நபர் விபத்தில் இறந்து விட்டால் அவரது நாமினிக்கு இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும்.
விபத்தில் இரண்டு கைகள் அல்லது கால்கள் இழந்தாலோ, இரண்டு கண்களையும் இழந்தாலோ அவை நிரந்தர ஊனமாகக் கருதப்பட்டு அவர்களுக்கும் 2 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு கண் ஒரு கை அல்லது ஒரு கால் போன்றவற்றை விபத்தில் இழந்தால், அது நிரந்தரப் பகுதி ஊனமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் எப்படி சேர்வது?
இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் நபருக்கு, தபால் அலுவலகங்கள் அல்லது பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஏதேனும் ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் பெற்று அதில் பரிந்துரைக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு அடையாளச் சான்றை சமர்ப்பிக்கலாம். சிக்கலான ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. நாமினியாக யாரை நியமிக்கிறார்களோ அவர்களுடைய விவரங்கள் குறிப்பிட வேண்டும்.
18 வயது முதல் 70 வயது வரையில் உள்ள நபர்கள் இதில் சேரலாம். ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பிரீமியம் தானாகவே கழிக்கப்பட்டு வரவு வைக்கப்படும்.
முக்கிய அம்சங்கள்:
இந்தத் திட்டத்தில் காப்பீடு செய்த நபர் விபத்தில் இறந்து விட்டால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லது அவரது நாமினி இதன் தொடர்பான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இறப்புச் சான்றிதழ் அல்லது உடல் உறுப்புக்கள் விபத்தில் இழந்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களுக்கும், விபத்தில் தற்காலிகமாக உறுப்புகளை இழந்தவர்களுக்கும் பணம் கிடைக்காது.
குறைந்த அளவு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்தக் காப்பீட்டுத் தொகை மிகவும் எளிதாக கிடைக்கிறது. மேலும் பிரீமியம் தொகை மிக மிகக் குறைவு என்பது இதில் உள்ள சிறப்பு அம்சமாகும். எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் குடும்பத் தலைவனை இழந்தால் அவர்களது குடும்பத்திற்கு இந்தத் தொகை மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறும் தனிநபர்கள் எதிர்காலத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வருடாந்திர பிரீமத்தை செலுத்துவதன் மூலம் திட்டத்தில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இந்தத் திட்டம் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுடன் இணைந்து அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க தயாராக உள்ள ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும். சந்தாதாரர் ஏற்கனவே வேறு ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து இருந்தாலும் கூடுதலாக இந்த அரசு காப்பீட்டுத் திட்டத்திலும் அவருக்கு விபத்து நேரம் பட்சத்தில் பணம் கிடைக்கும்.
இயற்கைப் பேரிடர்கள் காரணமாக பூகம்பம், புயல், மழை வெள்ளம் போன்றவற்றில் இறந்தாலும் அவையும் விபத்துகளாக கருதப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் வரும். தற்கொலை தவிர கொலை செய்யப்பட்டாலும் இந்த திட்டத்தின் கீழ் வரும்.
பஸ், ரயில், கார் அல்லது போன்ற வாகன விபத்துகளாலும், நீரில் மூழ்குதல் அல்லது பிற குற்ற செயல்களால் ஏற்படும் மரணம் போன்ற சம்பவங்களில் மரணம் நேர்ந்தால் இந்த விபத்து குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். பாம்பு கடித்தல், மரத்திலிருந்து கீழே விழுதல் போன்ற சம்பவங்கள் இருந்தால் அதற்கான காரணத்தை உடனடியாக மருத்துவமனை பதிவேடு மூலம் உறுதி செய்ய வேண்டும். இறந்த போன நபர்களின் இறப்புச் சான்றிதழ் மிகவும் முக்கியமானது
விபத்துக் காப்பீட்டு உத்திரவாதம் எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு மனிதருக்கு 70 வயது எட்டும் போது இந்த திட்டம் முடிவுக்கு வரும்.