

தபால் அலுவலக மாதாந்திர திட்டம் (POMIS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்பு திட்டமாகும். இது இந்திய தபால் அலுவலகம் வழங்கும் மிகவும் நம்பகமான திட்டங்களில் ஒன்று. அதிக ஆபத்துள்ள வழிகளில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு மாதாந்திர வருமானத்தை வழங்குவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமகன் எவரும் இக்கணக்கை தொடங்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக டெபாசிட் செய்து, குறிப்பிட்ட விகிதத்தில் மாதாந்திர வட்டியைப் பெற முடியும். வட்டியை நம் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆட்டோ கிரெடிட் வசதி மூலம் அல்லது வைப்புத்தொகையாளரின் வங்கிக் கணக்கில் மின்னணு கிளியரன்ஸ் சேவை (ECS) மூலம் பெறலாம்.
இது முதலீட்டாளர்களுக்கு நிலையான மாத வருமானத்தை வழங்குகிறது. ஒரு முறை மொத்த தொகையை டெபாசிட் செய்து, ஆண்டுக்கு 7.4% என்ற விகிதத்தில் மாதாந்திர வட்டியைப் பெறமுடியும்.
Post Office Monthly Income Schemeன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
முதலீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கில் வரவு வைக்கப்படும். நிலையான மாதாந்திர வருமானம் கிடைப்பதால் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறந்தது.
தனிநபர் கணக்கில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக்கணக்கில் (Joint Account) 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த ஐந்து ஆண்டுகால திட்டத்திற்கு ஆண்டிற்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் நம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். தனி நபர்கள் மற்றும் 3 பேர் வரை இணைந்து கூட்டுக்கணக்கு தொடங்கலாம். அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பதால் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு உள்ளது. உதாரணத்திற்கு ரூபாய் 9 லட்சம் தனிநபர் கணக்கில் முதலீடு செய்தால் 7.4% வட்டி விகிதத்தில் மாதந்தோறும் சுமார் ரூ. 5,500 வருமானம் பெறலாம்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூபாய் 30 லட்சம் வரை டெபாசிட் செய்து 8.2% வரை அதிக வட்டி மற்றும் மாத வருமானம் பெற முடியும்.
முதலீட்டிற்கு வரி விலக்கு இல்லை. வட்டி வருமானம் வரி வரம்பிற்கு ஏற்ப வரிக்கு உட்பட்டது. உத்திரவாதமான மாதாந்திர வருமானம், குறைந்த ஆபத்து, இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் எளிதாக அணுகக் கூடியது, சந்தை தொடர்பான அபாயங்கள் இல்லை போன்ற நன்மைகள் நிறைந்தது இத்திட்டம்.