
பொதுவாக நாம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்கும் கடன்கள் திரும்பி வருவதில்லை. கடனைத் திரும்பிக் கேட்பது உறவை பாதிக்குமோ என நாம் எண்ணுகிறோம். கொடுத்தக் கடனை திரும்ப வாங்குவதென்பது எளிதான விஷயமில்லை.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
*********************
ஒரு செம்மறியாடு அறுவடை காலத்தில் நிறைய கோதுமைகளைச் சேகரித்து வைத்தது. அது தனக்கு தேவையான அளவு மட்டும் உண்டு, மீதி கோதுமைகளை, தேவைப்படும் போது எதிர்காலத்திற்கு உதவும் என்று சேகரித்து வைத்தது.
இதனை எப்படியோ ஒரு மான் அறிந்து கொண்டது. அது அந்த கோதுமைகளை அபகரிக்க எண்ணியது. அது ஒரு ஓநாயை தனது உதவிக்கு கூப்பிட்டது. ஓநாயும் சம்மதித்தது.
செம்மறியாடு புத்திசாலி. ஓநாயும் மானும் தன்னிடம் வருவதைக் கண்டு ஏதோ திட்டத்துடன் தான் வருகின்றன என்று புரிந்து கொண்டு உஷாரானது.
'நண்பா! உன்னிடம் உள்ள கோதுமையை எனக்கு கொஞ்சம் கடனாக கொடு. அதற்கு அடமானமாக இந்த ஓநாயை வைத்துக் கொள்' என்றது மான்.
'நண்பா! ஓநாய் தட்டிப் பறிக்கும் வல்லமை உடையது. நீயோ விரைவாக ஓடும் வல்லமை படைத்தவன். உங்களிடம் கோதுமையைக் கடனாக கொடுத்துவிட்டு, என்னால் திரும்ப பெறுவது கடினம். எனவே என்னால் கோதுமையை கடனாக அளிக்க முடியாது.' என்றது செம்மறியாடு.
தங்கள் திட்டம் தோல்வியடைந்ததை கண்ட ஓநாயும் மானும் வந்த வழியே திரும்பின.
*******************
இந்தியாவில் வாராக் கடன்களின் சதவீதம் 2.8% என மார்ச் 2024 இல் இருந்தது. இது மார்ச் 1999 இல் அதிகபட்சமாக 14.7% என இருந்தது. குறைந்தபட்சமாக மார்ச் 2011 இல் 2.3% என இருந்தது. இந்த விபரங்களை வருடாவருடம் பாரத ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. வாராக்கடன்கள் என்பவை கடன் தவணை கட்ட வேண்டிய காலவரையறை 90 நாட்கள் தாண்டியும் , கடன் தவணை வராமலிருப்பது. தம்மிடம் வாராக் கடன்களை வசூலிக்க பல்வேறு முகாந்திரங்களை வைத்திருக்கும் வங்கிகளுக்கே இந்த நிலைமை எனில், நம்மைப் போன்ற சாதாரண நபர்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நாம் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் பணம் கேட்டால் நம்மால் எவ்வளவு தொகை இழப்பதற்கு தயாராக இருக்கிறோமோ அந்த அளவு மட்டும் கொடுக்கலாம். ஒருவேளை பணம் திரும்பி வராவிட்டாலும், அந்த இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஒரு வேளை கடன் திரும்பி வராவிட்டால் அதனை ஈகை என்று எண்ணிக் கொள்ளலாம்.
நம்மால் தாங்க முடியாத அளவிற்கு கடனைக் கொடுக்கவே கூடாது.
கடன் அன்பை முறிக்கும்.