பணத்தை சேமிப்பது என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அம்சமாகும். அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் சேமிப்பு என்பது பாதுகாப்பான எதிர்காலத்திற்கு மிகவும் தேவையானது. எனவே முறையான சேமிப்பு யுக்திகளைக் கடைப்பிடிப்பது, இந்தியாவில் உள்ள தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஒரு வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்த பதிவில் இந்தியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சில சேமிப்பு யுக்திகளைப் பார்க்கலாம்.
எந்த ஒரு பயனுள்ள சேமிப்பு திட்டத்திற்கும் பட்ஜெட்தான் அடித்தளம். உங்கள் நிதி நிலைமையில் தெளிவான புரிதலை ஏற்படுத்த, உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை முதலில் கண்காணிக்கத் தொடங்கவும். உங்களது செலவுகளை சரியாக கணக்கிட்டு, அதைக் குறைப்பதற்கு அல்லது சில மாற்றங்களை செய்வதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறியவும். பின்னர் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு ஒதுக்குங்கள்.
மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது நீண்ட கால சேமிப்பு மற்றும் பணத்தை பெருக்குவதற்கான சிறந்த வழி. SIP வழியாக சிறிய தொகைகளை தவறாமல் முதலீடு செய்வதால், நீங்கள் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும் என்கிற அழுத்தம் குறைகிறது. எனவே இந்தியர்கள் அனைவருமே கட்டாயம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.
நல்ல பலன்களையும், வருமானத்தையும் வழங்கும் பல சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு PPF, NSC ஆகியவை நீண்டகால சேமிப்புக்கான பாதுகாப்பான வழியாகும். இத்தகைய சேமிப்புகளுக்கு பணத்தை செலுத்த உங்களது வங்கிக் கணக்கை தானியங்கிப் படுத்துவது நல்லது. இவ்வாறு நீங்கள் செய்வது மூலம், பணத்தை நீங்கள் செலவழிக்கிறீர்கள் என்கிற உணர்வு இல்லாமல் வருமானத்தில் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காக ஒதுக்க முடியும்.
சேமிப்பில் மிகவும் முக்கியமானது தேவையற்ற செலவுகளில் விழாமல் இருப்பதுதான். உங்களது தேவைகள் மற்றும் விருப்பங்களை சரியாக வேறுபடுத்தி கவனத்துடன் செலவழிக்க வேண்டும். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அது உங்களுக்கு உண்மையிலேயே அவசியமானதா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். மனக்கிளர்ச்சிக்காக வாங்குவதைத் தவிர்த்து பணத்திற்கான மதிப்பில் கவனம் செலுத்துங்கள்.
உங்களது குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை முறையாக வரையறுக்கவும். அது ஒரு வீடு வாங்குவது, கல்வி கற்பது அல்லது ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் என எதுவாக இருந்தாலும் தெளிவான இலக்குகளை வைத்து, அதற்கான சேமிப்பை திட்டமிட வேண்டும். இது நிச்சயம் உங்களுக்கு எதிர்காலத்தில் பலனளிக்கும்.
வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது என எதையும் நம்மால் கணிக்க முடியாது. எனவே அவசர்கால நிதியை வைத்திருப்பது அவசியம். மூன்று முதல் ஆறு மாத வாழ்க்கை செலவுகளுக்குத் தேவையான பணத்தொகையை, கட்டாயம் சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்த நிதியானது திடீர் மருத்துவ தேவை அல்லது வேலை இழப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் பாதுகாப்பை வழங்கும்.
இவ்வாறு நிதி சார்ந்த விஷயங்களில் முறையாக திட்டமிட்டு, பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க முற்படுங்கள். தேவையில்லாமல் இன்ஸ்டாகிராம் ரீல்களிலும், யூடியூப் ஷார்ட்ஸ்க்களிலும் காணொளிகளைப் பார்த்து, வாழ்க்கை அனுபவிக்க வேண்டியது, இந்த நொடியை ரசித்து வாழப்போகிறேன் என எதிர்காலத்தை முறையாக கட்டமைக்கத் தவறினால், நிச்சயம் அது உங்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்துவது உறுதி. எனவே இன்றே சேமிக்கத் தொடங்குங்கள்.